திருப்பதியில் தீவிரவாத அச்சுறுத்தல்.. உளவுத்துறை எச்சரிக்கையால் ரெட் அலர்ட் அறிவிப்பு
Recommended Video
திருப்பதி: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால் திருப்பதிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அங்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ம் தேதி தமிழகத்தில் கோவை நகருக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி மற்றும் இலங்கையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோயில், சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயில் உள்ளிட்டவற்றுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதனால் அங்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணிப்பாக்கம் விநாயகர் கோயில், திருமலை ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்களை அலிபரி சோதனைச் சாவடியில் மோப்ப நாய் படை, வெடிகுண்டு அகற்றும் படை ஆகியவை சோதித்த பின்னரே அனுப்புகின்றன.
இதுகுறித்த திருமலை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், திருமலைக்கு கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை கூறிவருகிறது. இதன் காரணமாக திருமலையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையும் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.