திருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு
திருப்பதி: திருப்பதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி ரயில் நிலையத்தின் அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோயில் என்ற பழமையான கோயில் உள்ளது. பொதுவாக திருமலைக்கு வரும் பக்தர்கள் முதலில் கோவிந்தராஜூலு பெருமாளை தரிசனம் செய்வர்.
அதன் பின்னரே திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையம் அருகில் கோவில் உள்ளதால் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கில் சுவாமி தரிசனம் செய்வர்.
பெட்டக அறை
இந்த கோயிலில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தங்கம், வைரம், வைடூரியம் நகைகள் அணிவிப்பது வழக்கம். பின்னர் அது சரிபார்க்கப்பட்டு பெட்டக அறையில் பூட்டி வைக்கப்படும். மேலும் தினந்தோறும் பெட்டக அறையை திறந்து அதிகாரிகள் நகைகளை சரி பார்ப்பதும் வழக்கமாகும்.
அதிர்ச்சி
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நகை பெட்டகத்தை சரி பார்த்தனர். அப்போது 3 தங்க வைடூரிய நகைகள் காணாததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
6 தனிப்படைகள்
வேறு பெட்டகத்தில் வைத்து விட்டோமா என்று அறை முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நகைகளை கிருஷ்ண தேவராயர் வழங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ. 10 கோடியாகும். இந்த கிரீடங்களை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விசாரணை
கல்யாண உற்சவம் நடைபெறும் மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஒரு மாதமாக பழுதாகியுள்ளது. இதனால் போலீஸாருக்கு சவாலான காரியமாக உள்ளது. இது தொடர்பாக அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
பக்தர்கள் கவலை
கடந்த 2011ம் ஆண்டு திருப்பதி அலிப்பிரி அருகேயுள்ள கோதண்டராமர் சாமி கோவிலில் சாமி நகைகள் கொள்ளை நடந்தது. அப்போது நடந்த போலீஸ் விசாரணையில் அந்த கோவிலின் பிரதான அர்ச்சகரே சாமி நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது போல் தொடர் திருட்டால் பக்தர்கள் கவலையில் உள்ளனர்.