பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.10 கோடி உண்டியல் வசூல்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடைக்கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பக்தர்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வைகாசி விசாகம் சனிக்கிழமை வந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
39 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 18 மணி நேரத்திற்கு பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை விதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
நடைபாதை, சிறப்பு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்து மதம் பற்றிய வரலாறு தெரியாமல் பேசுகிறார் கமல்ஹாசன்... இல.கணேசன் காட்டம்
முன்னதாக, திருப்பதியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உண்டியல் வருமானம் ரூ.84 கோடியே 27 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.