திருப்பதிக்கு ஆன்மீக பயணம் வந்த இலங்கை அதிபர்.. குடும்பத்தினருடன் பெருமாளை தரிசித்தார்
திருப்பதி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். ஆன்மீகப் பயணமாக குடும்பத்துடன் நேற்று விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார் சிறிசேன. அவரை சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, திருப்பதி உதவி ஆட்சியர் மகேஷ்குமார் மற்றும் எஸ்.பி. அன்புராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் திருமலைக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேன பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். சிறிது நேர ஓய்விற்கு பின்னர் ஸ்ரீவாரி பாதத்தை சாமி தரிசனம் செய்தார்
இன்று திருப்பதி கோயில் வந்த சிறிசேனவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவர், குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் 6.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்ற சிறிசேன, சாமி தரிசனம் செய்தார். திருப்பதி பெருமாளை தரிசனம் செய்த அவருக்கு ஸ்ரீ ரங்கநாயகி மண்டபத்தில் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை அதிகாரிகள் வழங்கினர். மேலும் சிறிசேனவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பதி ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயார் இருக்கும் புகைப்படம் வழங்கப்பட்டது.
தனிப்பட்ட பயணத்தை முடித்து கொண்டு சிறிசேன இன்று மாலை பெங்களூருவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கொழும்பு செல்கிறார். இதனிடையே கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.