திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி
திருப்பதி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் திருமலை திருப்பதி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆகம விதிப்படி பூஜைகள் வழக்கம் போல் நடந்து வந்தது.
அதேநேரம் அரசு சில மாதங்கள் கழித்து தளர்வுகள் அறிவித்ததையடுத்து கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் திருப்தி கோவில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மக்களின் அச்சத்தில் லாபம் ஈட்ட முயற்சி.. பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. ஹைகோர்ட்
கடும் கட்டுப்பாடு
இதன் பின்னர் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியாற்றிய 50 போலீசார் உள்பட 170க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து. திருப்பதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. திருப்பதியில் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
முழு ஊரடங்கு அமல்
இந்த நிலையில், திருப்பதியில் கொரோனா தொற்று மீண்டும் கடுமையாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. திருப்பதியில் சுமார் 7000த்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தரிசனம் அதிகரிப்பு
இநநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதான அர்ச்சகராக பணியாற்றிய சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவால் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார்.
தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். செவ்வாய்க்கிழமை முழுவதும் 3,962 பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனர். .
மக்கள் தரிசனம்
தற்போது திருப்பதியில் ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருமலை தரிசன நேரம்
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகிறார்கள். திருப்பதி மலைச் சாலை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.