"அம்ருதா.. அம்மா கூடவே போய்ரும்மா" மகளுக்கு கடிதம் எழுதி விட்டு.. தூக்கில் தொங்கிய தொழிலதிபர்!
தந்தையின் இறுதி சடங்கில் அம்ருதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
திருமலை: "ம்மா அம்ருதா.. அம்மா கூடவே போய்டும்மா" என்று மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் தொழிலதிபர்.. "கடைசியா அப்பா முகத்தை பார்க்கணும்" என்று கண்ணீருடன் வந்த அம்ருதாவை அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வெளியே தடுத்தி கலாட்டா செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவை சேர்ந்த தொழிலதிபர் மாருதிராவ்... இவரது மகள் அமிர்தா... பிரனய் என்பவரை காதலித்தார்.. ஆனால் பிரனய் பட்டியலினத்தை சேர்ந்தவர்.. இதனால் அமிர்தா வீட்டில் காதலை ஏற்கவில்லை.
குறிப்பாக மாருதிராவ் மகளின் காதலை அனுமதிக்கவே இல்லை.. இதனால் அமிர்தா வீட்டை எதிர்த்து பிரனய்யை கைபிடித்தார்.. கர்ப்பமும் ஆனார்.
சாதி மறுப்பு திருமணம்.. செய்து வைத்தவரை கடத்திய கும்பல்.. புதுமண தம்பதிக்கும் அடி உதை!
மாருதிராவ்
2018ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி 3 மாத கர்ப்பிணியாக இருந்த அமிர்தா பிரனயை மிரியாலகுடாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அந்த சமயத்தில் மாருதிராவ் ஏற்பாடு செய்த கூலிப்படை கும்பல், ஆஸ்பத்திரி வெளியே அமிர்தாவின் கண் முன்னாடியே பிரனயை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இந்த கொடூர காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவானது.
ஆணவ கொலை
இந்த ஆணவக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் மாருதிராவ் உள்பட கூலிப்படையை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்... இதனிடையே கொலை வழக்கில் தனக்கு சாதகமாக சாட்சி சொன்னால் தனது சொத்துக்களை வழங்குவதாக மகள் அமிர்தாவுக்கு மாருதிராவ் ஆசை வார்த்தை சொல்லி தூது அனுப்பினார்.
ஜெயில் தண்டனை
ஆனால் அதனை ஏற்க அமிர்தா மறுத்தார்... கர்ப்பத்தைக் கலைக்குமாறு கூறி தந்தை மிரட்டியதாக மகள் அம்ருதா போலீஸில் வாக்குமூலம் அளித்தார்... இதையடுத்து குண்டர் சட்டத்தில் மாருதிராவ், கைது செய்யப்பட்டார்... 7 மாத ஜெயில் தண்டனைக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.. இதற்கு பிறகு இவர்கள் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால், பிரனய்க்கு நீதி கேட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.
சோதனை
அதேபோல, ஆணவ கொலையை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் என்று அம்ருதாவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆரிய வைசிய பவன் ஹோட்டலில் மாருதிராவ் 2 நாளைக்கு முன்பு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. போலீசார் விரைந்து வந்து அந்த ரூமை சோதனையிட்டபோது, ஒரு கடிதம் கிடைத்தது.. அதை மாருதிராவ் தான் கைப்பட எழுதியிருந்தார்.
தற்கொலை
அதில், ‘அம்மாவுடன் போய்விடும்மா அமிர்தா" என்று சொல்லி, மேலும் சில தகவல்களை தெரிவித்திருந்தார். ஆனால், போலீசார் கடிதம் குறித்து வேறு தகவலை வெளியிடவில்லை.. தந்தையின் மரணம் குறித்து அம்ருதா சொல்லும்போது "அப்பா இறந்ததை டிவி நியூசில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.. மருமகனை கொன்னுட்டோமே என்ற வருத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து, மாருதிராவ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாதுகாப்பு
நேற்று இறுதி சடங்கும் நடந்தது.. இறுதியாக தந்தையின் உடலை ஒரு முறை பார்க்க வேண்டும் என போலீசாரின் பாதுகாப்பை அம்ருதா கேட்டார்.. அதன்படி பாதுகாப்பு வழங்க, நேற்று தன் தாய் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார் அம்ருதா.... எப்படியும் தன் மீது கடுமையான கோபத்தில் உள்ள குடும்பத்தினர் தாக்கக்கூடும் என்றுதான் அம்ருதா பாதுகாப்பு கேட்டிருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
அவர் பயந்தபடியேதான் நடந்தது.. வீட்டிற்கு வந்ததுமே அவரது அம்மா, சகோதரர், சொந்தக்காரர்கள் எல்லோருமே கடுமையாக விமர்சித்து அவரை உள்ளே விடாமல் தடுத்து அமர்க்களம் செய்தனர். அதனால் தூரத்தில் இருந்துதான் அம்ருதா அப்பாவின் சடலத்தை பார்த்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்ருதா, "அவர் இன்னமும் எனக்கு அப்பா என்பதால்தான் இங்கு வந்தேன்.. ஒருமுறை அவர் முகத்தை பார்த்துவிட துடித்தேன்.. அப்பாவை இழந்த என் அம்மாவின் வலியை என்னால் உணர முடிகிறது.
களேபரம்
ஆனால் எனக்கு இங்கே ஒரு குடும்பம் உள்ளது. என் கணவரின் குடும்பத்தை விட்டு என்னால் போக முடியாது. கொலை வழக்கும் இன்னும் நடந்து வருகிறது.. அதனால் நான் தங்கியிருக்க வேண்டும்.. வேண்டுமானால் அம்மா விருப்பப்பட்டால் என்னுடன் வந்து தங்கி இருக்கட்டும்.. அவரை வரவேற்க நான் தயாராக இருக்கிறேன்.. " என்றார். மகளை பெற்ற அப்பாவின் முகத்தைகூட பார்க்க விடாமல் களேபரம் செய்த இந்த சம்பவம் தெலுங்கானாவில் மீண்டும் பரபரப்பை தந்துள்ளது.