ஆந்திராவில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்து.. சாகும் போது லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்
திருப்பதி: ஆந்திராவில் பிச்சை எடுத்து 15 ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேமித்த பிச்சைக்காரர் கடைசியில் லட்சாதிபதியாக உயிரிழந்து உள்ளார். அவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது பையில் இருந்த ரூ.1.83லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
ஆந்திராவின் ராஜமகேந்திரவரத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர் பிச்சை எடுத்து வந்தார்.
இந்த கோயில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கோயிலில் பிச்சை எடுத்து காஞ்சி நாகேஸ்வரராவ் பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவர்கள் தட்டில் போடும் பணத்தை வாங்கி கொண்டு அங்கேயே கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சி நாகேஸ்வரராவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசம் அடைந்தது. கடந்த சனிக்கிழமை இரவு கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் உயிரைவிட்டார்.
இதுகுறித்து அறிந்த ராஜமகேந்திரவரம் கோயில் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கோயிலில் விசாரணை நடத்தினர். மேலும் காஞ்சி நாகேஸ்வர ராவ் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் ரூ.1.83 லட்சம் இருப்பதை கண்டு போலீசார் ஆச்சர்யம் அடைந்தனர். இந்த பணத்தை காஞ்சி நாகேஸ்வரராவ் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்ததை விசாரணையில் போலீசார் அறிந்தனர். இதையடுத்து போலீசார், அந்த பணத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்தை எடுத்து நாகேஸ்வரராவின் இறுதிச் சடங்கை நடத்தினர். மீதமுள்ள பணத்தை அப்படி கோயிலில் வாழும் சாதுக்களுக்கே அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.