திருப்பதியில் அதிநவீன புதிய பேருந்து நிலையம்... ரூ.100 கோடியில் அமைகிறது
திருப்பதி: பக்தர்களின் வசதிக்காக, திருப்பதியில் ரூ.100 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தேவஸ்தானம் சார்பில், செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதியில் அலிபிரி பேருந்து நிலையம், பாலாஜி பேருந்து நிலையம், ஏடுகொண்டலு பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம், லீலா மகால் சர்க்கிள் பேருந்து நிலையம், கபிலேஸ்வரசாமி கோவிலை அடுத்த நந்தி சர்க்கிள் அருகில் உள்ள பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் பேருந்து நிலையம் உள்ளது.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. விஷேச நாட்களில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், திருப்பதியில் மேலும் ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்து திருப்பதியை அடுத்த பாலாஜி பால் பண்ணை அருகே 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது.
அமித்ஷாவின் வித்தைகளில் கருத்து கணிப்பும் ஒன்று.. திட்டமிட்ட ஏற்பாடே.. கி.வீரமணி சாடல்
அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த புதிய பேருந்து நிலையம், சென்னை மாதாவரத்தில் உள்ள பேருந்து நிலையத்தைப்போல் ஒரு முன்மாதிரி பேருந்து நிலையமாக அமைக்கப்பட உள்ளது.
அதிநவீன வசதியுடன், அமைக்கப்பட உள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில் திருப்பதி மாநகர பேருந்துகள் மற்றும் ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.