திருப்பதி பிரம்மோற்சவம் செப். 23ல் கருடசேவை - ஆந்திரா முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வரும் 23ஆம்தேதி நடைபெற உள்ளது. இந்த கருட சேவையின் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இந்த ஆண்டு வரும் 19ஆம் தேதி தொடங்குகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கும், மலையப்பசுவாமிக்கும் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெருமாளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசியில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.
பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாள்களும் திருப்பதி களைகட்டியிருக்கும். தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி அருள்பாலிப்பார். இந்த ஆண்டு 19 செப்டம்பர் 2020 முதல் 27 செப்டம்பர் 2020 வரை பிரம்மோற்சவம் நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏகாந்தமாக பெருமாள் வலம் வரப்போகிறார்.
திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்கிழமைகளில், ஏழுமலையான் கருவறை முதல் கோவில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். செவ்வாய்கிழமை தினமான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
வரும் 19ஆம் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் போது தினந்தோறும் மலையப்பசுவாமி அலங்கரிக்கப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வரும் 23ஆம்தேதி நடைபெற உள்ளது. இந்த கருட சேவையின் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
வழக்கமாக முதல்நாளில் பட்டு வஸ்திரம் அளிப்பார் ஆந்திரா முதல்வர். இந்த ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் ஜெகன்மோகன் ரெட்டி கருடசேவையின் போது பட்டு வஸ்திரம் அளிக்கிறார்.
திருப்பதி பிரம்மோற்சவம் 2020: ஏழுமலையான் ஏகாந்த சேவை - மாட வீதிகளில் வாகன வீதி உலா இல்லை
இதை தொடர்ந்து அன்று இரவு திருமலையில் தங்கி, மறுநாள் 24 ம் தேதி காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கர்நாடக மாநில அரசின் சார்பில் திருமலையில் ரூ.200 கோடியில் பக்தர்களுக்காக தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. இதற்காக 24ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கின்றனர்.
இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து
திருப்பதியில் நாளொன்றுக்கு 3,000 இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. இதனால் தமிழகத்திலிருந்து 10,000 முதல் 12,000 பக்தர்கள் இந்த டிக்கெட்களை வாங்க தினந்தோறும் வருகின்றனர். இதுவே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக அமைவதாக சிலஅதிகாரிகள் கருத்து தெரிவித்ததால், இலவச டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரத்து செய்யப்பட்ட 3,000 இலவச தரிசன டிக்கெட்களுக்கு பதில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.