மார்கழியில் ஆண்டாள் திருப்பாவை பாடி திருப்பதி ஏழுமலையானை துயில் எழுப்பும் ஜீயர்கள்
திருப்பதி கோவிலில் வருகிற 17ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.
திருப்பதி: மார்கழி மாதத்தில் திருப்பதியில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை துயில் எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்று திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்படும் என்று தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பிரபல இசையரசி எம்.எஸ்.சுப்பலட்சுமியின் பாடப்பட்ட சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தைமாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவார்கள்.
திருப்பதியில் இரவு தங்கியிருப்பவர்களுக்கு அங்கு அதிகாலையில் ஒளிபரப்பாகும்
"கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்" என்ற சுப்ரபாதத்தை கேட்கும் போதே பரவசம் அதிகரிக்கும். 11 மாதங்கள் சுப்ரபாதம் ஒலிக்கும் திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் திருப்பாவை பாசுரங்கள் ஒலிபரப்பப்படும்.
வைணவ திருத்தலங்களில் மார்கழி 1ஆம் தேதி முதல் மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்து ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி காலை 6.40 மணியளவில் மார்கழி மாதம் தொடங்குவதால் திருப்பதி கோவிலில் வருகிற 17ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும். மீண்டும் வழக்கம் போல ஜனவரி 15ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையானை துயில் எழுப்புவார்கள். மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்படும் என்று தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.