திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகைபிரம்மோற்சவம் - ஏகாந்த தரிசனம்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 11ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் தேதி காலையில் கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், கோவில் வளாகத்திலேயே ஏகாந்தமாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைணவ பக்தர்கள் போற்றி வணங்கும் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு தினசரியும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி மலை மீது எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதே போல திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவின் தொடக்கமாக வருகிற 11ஆம் தேதி காலையில் கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அன்று இரவில் பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
12ஆம் தேதி காலையில் தாயார் பெரிய சேஷ வாகனத்திலும், அன்று இரவு அன்னப்பறவை வாகனத்திலும், 13ஆம் தேதி காலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவில் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளுகிறார். அதே போல் தொடர்ந்து காலை மற்றும் இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும், நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், கோவில் வளாகத்திலேயே ஏகாந்தமாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயார் ஆலயத்தில் ஆழ்வார் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது. முன்னதாக, கொடி மரம், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள், கோவிலின் மேற்கூரைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், கிச்சிலிகடா உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீர் ஆலயம் முழுவதும் தெளிக்கப்பட்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
நடப்பு ஆண்டில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாட்டிலுள்ள பெரும்பாலான கோவில்களில் வழக்கமாக நடைபெறும் திருவிழாக்கள் எல்லாமே பக்தர்கள் இல்லாமலேயே நடைபெற்றது. அதற்கு மாற்று ஏற்பாடாக விழாவினை இணைய தளத்தின் வழியாக ஆன்லைனில் கண்டு தரிசித்தனர். ஏழு மாதங்களுக்கு பிறகு மலையப்பசுவாமி சில தினங்களுக்கு முன்பு மாட வீதிகளில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.