திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) பணியாற்றும் 743 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதில் திருமலையில் ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் சில அர்ச்சகர்களுக்கும் கொரோனா வந்திருப்பதை அதிகாரி உறுதி செய்தார்.
பாதிக்கப்பட்ட 743 பேரில், மூன்று ஊழியர்கள் தொற்றுநோயால் இதுவரை இறந்துவிட்டார்கள். சுமார் 402 பேர் இதுவரை தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், 338 பேர் இங்குள்ள பல்வேறு கோவிட் பராமரிப்பு வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் திருமலையில் உள்ள புகழ்பெற்ற பகவான் வெங்கடேஸ்வரர் கோயில், கொரோனா வைரஸால் தொற்று பரவியதன் விதிக்கப்பட்ட லாக்டவுனால் மூடப்பட்டிருந்தது. இரண்டரை மாதங்களுக்கு பின்னர் ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. மத்திய அரசு அறிவித்த தளர்வுகளை ஏற்று திருப்பதி கோயிலை ஆந்திர அரசு திறந்தது. ஆனால் அதன்பின் எதிர்பாராத விதமாக ஆந்திராவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.
வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா? டிஸ்சார்ஜ் மிக அதிகம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கஜானாவை நிரப்பும் நோக்கத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலை மீண்டும் திறந்து விட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.
பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் பழமையான இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டது என்றும் கடுமையான கோவிட் -19 நடவடிக்கைகளைப் பின்பற்றி பக்தர்கள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.