உண்டியலில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள்.. மத்திய அரசு உதவியை கேட்கும் திருப்பதி கோவில் நிர்வாகம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி, மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை நேற்று டெல்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பா் 8ஆம் தேதி மதிப்பிழப்பு செய்தது. இதன்பிறகு பழைய நோட்டுக்களை மாற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், பண மதிப்பிழப்புக்கு பிறகும், பல பக்தர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில், பழைய, ரூ..500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இதுவரை, சுமார் ரூ.6.38 லட்சம் அளவுக்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 நோட்டுக்களும், ரூ1.8 லட்சம் அளவுக்கு ரூ.1000 நோட்டுக்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
மருத்துவ கனவுகளை பொசுக்கும் நீட்-க்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம்
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு தொடா்பாக கடந்த 2014, ஏப்ரல் 1 முதல் நடப்பு ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரித்தொகையான ரூ.23.78 கோடியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்பா ரெட்டி, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு தள்ளுபடி செய்தால், அத்தொகையை தேவஸ்தானம் நடத்தி வரும் பல கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தேவஸ்தானம் பலமுறை ரிசா்வ் வங்கியிடமும், மத்திய அரசிடமும் முறையிட்டும், இதுவரை பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை மாற்றித்தரவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.