ஏழுமலையான் கோவில் வருமானம் இழப்பு... வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டம்
ஏழுமலையான் கோவிலில் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் செலவிற்காக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல பிரம்மோற்சவம் இந்த ஆண்டு நடைபெறுமா இல்லையா என்பது பற்றி இன
திருப்பதி: பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கே வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து போனதால் கோவில் செலவிற்காகவும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோயில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் ஒரு முறை கூட வங்கிகளில் சேமிக்கப்பட்டு வரும் கோயில் பணத்தை எடுத்ததே இல்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஏழுமலையான் கோவில் வருமானமே முடங்கி விட்டதால் முதன் முறையாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தை எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதே போல இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை எப்படி நடத்துவது என்பது பற்றியும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.... உடல் நலம் பாதிப்பு... இன்று ராஜினாமா செய்கிறாரா?
மாதம் ரூ. 100 கோடி வருமானம்
இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையான். தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு உண்டியலில் லட்சம் லட்சமாக காணிக்கையை கொட்டுவார்கள். திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் அளவுக்கு உண்டியல் காணிக்கை வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
வருமானத்தை பாதித்த வைரஸ்
எல்லாம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் வருவதற்கு முன்புதான். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில் மூடப்பட்டது. 80 நாட்கள் கழித்து கோவில் திறக்கப்பட்டது என்றாலும் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் கோவில் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த நான்கு மாதத்தில் 400 கோடி ரூபாய் காணிக்கை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம்
கோவில் வளாகத்தில் பணி செய்யும் ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் சிலர் உயிரிழந்தனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடையே அச்சம் எழுந்தது. புரட்டாசி மாதம் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. 10 நாள்களும் திருப்பதி ஏழுமலையான் கோவில் களைகட்டியிருக்கும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் சிறப்புடன் நடைபெறுமா என்னும் சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது
பக்தர்கள் இல்லாத பிரம்மோற்சவம்
இந்த ஆண்டு 19 செப்டம்பர் 2020 முதல் 27 செப்டம்பர் 2020 வரை பிரம்மோற்சவம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்வார். இவற்றுள் முக்கியமாக 23.9.2020 அன்று கருட வாகனமும், 26.9.2020 அன்று ரதோத்சவமும் நடைபெற வேண்டும். கடந்த ஆண்டு 7 லட்சம் பக்தர்கள் பிரம்மோற்சவத்தில் பங்கேற்றனர். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக அளவில் பக்தர்களை அனுமதிக்க முடியாது அரசும் அனுமதி கொடுக்காது.
ஆலோசனை கூட்டம்
இன்றைய தினம் ஏழுமலையான் கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெறும் அந்த ஆலோசனை கூட்டத்தில், திருப்பதி கோயில் பற்றிய 52 விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பிரமோற்சவம் நடத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை செலவிற்காக எடுப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
ரூ.14 ஆயிரம் கோடி டெபாசிட்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள ரூ.14,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த செலவிற்காகவும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததே இல்லையாம். சீனிவாச பெருமாள் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்காக குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்திருக்கிறார். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே வட்டி கட்டுவதாக புராண கதை கூறுகின்றனர். இனி பெருமாள் எப்படி வட்டி கட்டுவாரோ என்பது பக்தர்களின் கவலையாக உள்ளது. என்னடா இந்த ஏழுமலையானுக்கு வந்த சோதனை.