திருப்பதி ஏழுமலையானுக்கே பணமில்லையா? அப்புறம் எப்படி குபேரனுக்கு வட்டி கட்டுவாரு
கொரோனா வைரஸ் பாதிப்பு திருப்பதி ஏழுமலையானின் வருமானத்தையே அசைத்து பார்த்து விட்டது. அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் போட வருமானம் இல்லை
திருப்பதி: கொரோனாவினால் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல மத வழிபாட்டுத் தலங்களும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதற்கு பணக்கார கோவிலான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலும் தப்பவில்லை பெரிய அளவில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. 400 கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாமல் திணறி வருகிறார்களாம். சீனிவாச பெருமாள் கிட்டையே பணம் இல்லாவிட்டால் அவர் எப்படி குபேரன் கிட்ட வாங்கின கடனுக்கு வட்டி கட்டுவாரோ தெரியலையே என்று பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும். 50 நாட்கள் கடந்தும் ஊரடங்கு நீடித்து வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில் அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படாமல் முடங்கியுள்ளது. போதுமான வர்த்தகம், வருமானம் ஏதுமின்றி இந்தியப் பொருளாதாரம் மேலும் பாதாளம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையான். தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு உண்டியலில் லட்சம் லட்சமாக காணிக்கையை கொட்டுவார்கள். எல்லாம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் வருவதற்கு முன்புதான். மார்ச் மாதம் முதல் கோவில் மூடப்பட்டு விட்டது. பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் உண்டியல் வருமானம் தடைபட்டுள்ளது. அதே நேரத்தில் கோவில் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ரூ. 300 கோடியை அங்கு பணியாற்றுபவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்டுள்ளது என்றும் தேவஸ்தானம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
கொரோனா லாக்டவுன்: 2 மாதங்களுக்குப் பின் ரயில் போக்குவரத்து- முதல் கட்டமாக 8 ரயில்கள் இன்று இயக்கம்
கொரோனாவால் வருமானம் பாதிப்பு
கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவிலுக்கு வந்து உண்டியலில் பணம் போட்டால் மட்டுமே கோவில்களுக்கு வருமானம் வரும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி உண்டியல் பணம் எண்ணுவார்கள். உண்டியலில் பலகோடி காணிக்கையாக விழும். இப்போது பக்தர்கள் யாரும் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் கோவிலின் உண்டியல் வருமானம் சுத்தமாக குறைந்து விட்டது.
ரூ. 400 கோடி இழப்பு
சிறப்பு தரிசன கட்டணமாக பல கோடி வசூலாகும். இப்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. கடந்த சில மாதங்களாக ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவர் வை.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார். ரூ. 300 கோடியை அங்கு பணியாற்றுபவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்டுள்ளார்களாம்.
ஊழியர்களுக்கு சம்பளம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பக்தர்கள் இன்னும் எத்தனை மாதம் கழித்து கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியாது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தேவஸ்தானத்தில் பணியாற்றும் பலருக்கும் சம்பளம் தர இயலாத நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் பணம் டெபாசிட்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் மற்றும் வங்கிகளில் உள்ள ரூ.14,000 கோடி டெபாசிட் தொகை ஆகியவற்றை எடுக்காமல் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக சுப்பா ரெட்டி கூறியுள்ளார். எப்படியேனும் ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வட்டி கட்டுவாரா பெருமாள்
சீனிவாச பெருமாள் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்காக குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்திருக்கிறார். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கொண்டே வட்டி கட்டுவதாக புராண கதை கூறுகின்றனர். இனி பெருமாள் எப்படி வட்டி கட்டுவாரோ என்று பக்தர்கள் கவலைப்படுகின்றனர்.