ஏழுமலையான் கோவிலில் ஜீயர்களுக்கும் பரவிய கொரோனா - கோவிலை மூடும் எண்ணமில்லை
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று தீயாக பரவி வருவதால் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்திற்கு ஆந்திரா மாநில காவல்துறை பரிந்துரை செய்துள்ளது எனினும் கோவிலை மூடும் எண்ணம் எதுவுமில
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் ஜீயர்களான சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருப்பதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்தர்கள் வருகையை நிறுத்த ஆந்திரா மாநில காவல்துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் கோவிலை மூடும் எண்ணம் எதுவுமில்லை என்றும் பக்தர்கள் தரிசனம் தொடரும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. முதலில் 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 12500 பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வரும் வரிசைகளில் கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
நோய் தொற்று பரவலைப் பற்றிய கவலை ஏதும் இன்றி ஏழுமலையான் மீது பாரத்தை போட்டு விட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பதி சென்று ரிலாக்ஸ் ஆக தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதுநாள்வரைக்கும் 3 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 15 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
இதனிடையே கோவில் ஜீயர்களான சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருப்பதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்துக் கைங்கரியங்களுக்கும் ஜீயர்கள் கண்காணிப்பாளர்களாகச் செயல்படுவதால், அவர்கள் சிகிச்சை முடிந்து மடத்திற்குத் திரும்பும்வரை கோவில் கைங்கரியங்களைக் கண்காணிப்பது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கொரோனா : இன்று முழு லாக்டவுன் - திங்கட்கிழமை காலை 6 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருங்க
கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஜீயர்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத் தற்காலிக தடை விதிக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாகி சுப்பா ரெட்டி, கோவிலை மூடும் எண்ணம் எதுவுமில்லை என்று கூறினார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு பக்தர்கள் இல்லை என்றும் கோவில் ஊழியர்கள் 140 பேரில் பெரும்பாலானவர்கள் குணமடைந்து விட்டதாகவும் கூறினார். சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனர். அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு தனித்தனி இடவசதி செய்து தரப்பட்டுள்ளது சத்தான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். வயதான அர்ச்சகர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல வயதான பக்தர்கள்,குழந்தைகளுக்கும் அனுமதி கிடையாது என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார். தினசரி 1200 பக்தர்கள் வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.