கொரோனா பரவுது கோவிலுக்கு வராதீங்க - திருப்பதி, சபரிமலை ஆலய நிர்வாகங்கள் அறிவிப்பு
சளி, காய்ச்சல், இருமல் இருக்கும் பக்தர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரவேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி பரவியுள்ளது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் அதிகம் கூடவேண்டாம் என மும்மதங்களின் நிர்வாகங்கள் சார்பாகவும் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடும் திருமலைக்கு சளி, காய்ச்சல் இருமல் தொற்று உள்ளவர்கள் யாரும் வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பதி மலைக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதே போல சபரிமலைக்கு பங்குனி மாத பூஜைக்கு வரவேண்டாம் என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இருப்பது வழக்கம். வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள், வெளிநாட்டினர் ஏழுமலையான் கோயிலுக்கு வரவேண்டுமென்றால் இந்தியாவிற்கு வந்து 28 நாட்களுக்கு பிறகுதான் கோயிலுக்கு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இன்று கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளது. பக்தர்கள் மே மாதம் வரை முன்பதிவு செய்த ரூ.300 தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்துகொள்ளலாம் என்றும், தரிசனத்தை வேறு தேதியில் முன்பதிவு செய்துகொள்ளவும் ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தலைவளி, சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பக்தர்கள் யாராக இருந்தாலும் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பதி மலையில் உள்ள அலிபிரி சோதனை சாவடி, நடந்து மலையேறி செல்லும் பாதைகள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உரிய அறிகுறிகளுடன் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தி, சிகிச்சை அளித்து, அந்த பக்தருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்தபின் திருப்பதி மலைக்கு அனுப்பி வைக்க சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் தேவஸ்தான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிக உடல் வெப்பத்துடன் திருப்பதி மலைக்கு செல்வதற்காக வரும் பக்தர்கள் அலிப்பிரி சோதனை சாவடி, நடந்து மலையேறி செல்லும் பாதைகள் ஆகியவற்றில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
பின்னர் அங்கிருந்து அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, அந்த பக்தருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்த பின்னர் மட்டுமே அவர் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இன்று மார்ச் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது, எனினும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. அதேபோல், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என மலையாள சினிமா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பனும், திருப்பதி ஏழுமலையானும் கொரோனாவில் இருந்து பக்தர்களை காக்கமாட்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பலாம். வந்த பின்னர் துன்பப்பட்டு இறைவன் இறைவன் அருளால் குணமடைவதை விட வரும் முன்பு தடுப்பதும் மக்களை காப்பதும் கூட கடவுள் அருள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.