திருப்பதி வைகுண்ட ஏகாதசி - ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய போட்டா போட்டி
திருப்பதியில் 10 நாட்கள் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே 3 நாட்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்த்தது.
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனத்திற்கான டிக்கெட் விற்பனை நிறைவடைந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மார்கழி மாதம் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 25ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும். விரதமிருந்து உண்ணாமல் உறங்காமல் இருந்த பக்தர்கள் மறுநாள் துவாதசி நாளில் பெருமாளை தரிசனம் செய்து விட்டு சாப்பிடுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழா பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக நடைபெறும். திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பெருமாளை காண பக்தர்கள் திரள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஆன்லைனில் தரிசனம் செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25ம் தேதி துவங்கும் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதன்முறையாக 10 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து 300 ரூபாய் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளான டிசம்பர் 25, துவாதசி நாளான 26, மறுநாள் திரயோதசி நாளுக்கான டிக்கெட்டும் விற்பனையாகி விட்டது. பத்து நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்பதால் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதுச்சேரி - திருப்பதி இடையிலான பேருந்து சேவை மீண்டும் துவங்கியுள்ளது. புதுச்சேரியில் காலை 9 மணிக்கும், திருப்பதியிலிருந்து இரவு 10 மணிக்கும் பேருந்துகள் இயக்கபடவுள்ளன. புதுச்சேரியிலிருந்து இரவு பேருந்து சேவை விரைவில் துவங்கும் எனவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.