நெரிசலில் சிக்கும் பக்தர்கள்.! திருப்பதிக்கு வரும் விஐபி-க்களுக்கு வெங்கையா நாயுடு அறிவுரை
திருப்பதி: பக்தர்கள் கூட்ட நெரிசலால் கடும் சிரமத்தில் சிக்குவதை தவிர்க்க, விஐபி பிரமுகர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி கோயிலுக்கு வருவதை வழக்கமாக்கி கொண்டால் நன்றாக இருக்கும் என, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை கூறியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் சிறப்பு பயணமாக ஆந்திராவிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
வெங்கையா நாயுடுவின் வருகையையொட்டி திருமலை கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின் ஏழுமலையானை தரிசித்த வெங்கையா நாயுடுவுக்கு, திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தாம் வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம் என்றார்.
தமது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்ததால், தனக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். விஐபி எனப்படும் முக்கிய பிரமுகர்கள், திருப்பதிக்கு அடிக்கடி வராமல் தம்மை போலவே வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் இக்கோயிலில், சாதாரண பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இருக்கும் என அறிவுரை கூறினார்.
மேலும் பேசிய அவர் நான் தற்போது அரசியலில் இல்லை. துணை குடியரசுத் தலைவராக இருப்பதால் உலகம் முழுக்க சென்று வருகிறேன். இதில் ஒரு பகுதியாக ஐநா சபையில் பங்கேற்று உலக அமைதி மற்றும் வன்முறையை எவ்வாறு ஒழிப்பது என மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறேன். அதற்கு ஏற்ப செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
தீவிரவாதம் ஒழியவும், இயற்கை மற்றும் நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கவும் திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியதாக கூறினார். மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிரிட வேண்டும்.
ஊழல், பசி, இல்லாத சமூகம் அமைய வேண்டும். நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய சக்தியை தமக்கு தர வேண்டும் எனவும் ஏழுமலையானிடம் தாம் வேண்டி கொண்டதாக வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
கோடை விடுமுறை போன்ற சீசன் காலங்களில் சாதாரணமாகவே திருப்பதியில் பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் விஐபி-க்களின் சரிசனமும் சேர்ந்து கொண்டால், பக்தர்கள் சொல்ல முடியாத சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வெங்கையா நாயுடுவின் அறிவுரையை விஐபி-க்கள் மனதில் வைப்பார்களா..