கருவே தரிக்காமல் குழந்தை பெற்றதாக பெண் நாடகம்.. திருப்பதி மருத்துவமனையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு
திருப்பதி: கருத்தரிக்காமலேயே தான் கர்ப்பம் என கூறி திருப்பதி மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த பெண் தனது குழந்தையை மருத்துவர்கள் திருடிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்தவர் சசிகலா. இவர் திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு நிறைய முறை வந்துள்ளார், அங்கு பல முறை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை காலையும் அவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென தனக்கு குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தையை மருத்துவர்கள் திருடிவிட்டதாகவும் கூறி வாக்குவாதம் செய்தார்.
பெண் புகார்
இதையடுத்து மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் அந்த பெண்ணின் புகாரால் அதிர்ச்சி அடைந்து அலிபிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன்பேரில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
குழந்தை
அந்த பெண் தனக்கு பிரசவ வலி வந்தவுடன் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குழந்தை பிறந்த போது எனக்கு அந்த குழந்தையை காண்பித்த மருத்துவர்கள் திடீரென எனக்கு மயக்கம் மருந்து செலுத்தியதாகவும் , மயக்கம் தெளிந்து பார்த்த போது என் குழந்தையை காணவில்லை என்றும் புகார் கூறினார்.
மனநிலை பாதிப்பு
இதையடுத்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கர்ப்பமே இல்லை. அந்த பெண்ணின் அடிவயிற்றில் கட்டிகள் இருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு தான் கர்ப்பிணி என நினைத்துக் கொண்டார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என புகார் அளித்தனர்.
பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த இடத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர் அந்த பெண்ணிடம் சமாதானம் பேசிய போலீஸார் அவரை மன நல மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். கருவே தரிக்காமல் குழந்தை பிறந்ததாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.