விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - முதல்வரின் அடுத்த சரவெடி அறிவிப்பு
முதல்வர் பழனிச்சாமியின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
திருப்பூர்: விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
Recommended Video
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதிவாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவும் எதிர்கட்சியினரின் பல முனை தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகிறது. முதல்வர் பழனிச்சாமி உடனுக்குடன் அறிவிப்புகளை வெளியிட்டு அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
விவசாயிகளுக்கு அறிவிப்பு
சட்டசபையில் விவசாய கடன் ரத்து அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 24 மணிநேரமும் மும்முனை மின்சார அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, எங்கள் மீது எதிர்கட்சியினரால் எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது என்றார்.
விவசாயிகளின் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்றார்.
திமுக என்ன செய்தது
மக்களை பற்றி கவலைப்படாத கட்சி திமுக. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக என்ன செய்தது? 1100 என்ற எண்ணில் குறைகூறி தீர்வு காணும் திட்டம் ஸ்டாலின் சொல்லி நான் அறிவிக்கவில்லை என்று கூறிய முதல்வர், கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நான் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன். நேருக்கு நேர் ஸ்டாலின் விவாதம் நடத்த தயாரா என்று கேட்டார். மக்கள் விழிப்போடு இருப்பதால் ஏமாற்ற முடியாது என்றும் கூறினார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி
மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை என்று சொன்ன முதல்வர், மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம் என்று கூறினார். திமுக ஆட்சி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றும் சொன்னார். எதுவுமே செய்யாமல் போகும் இடங்களில் எல்லாம் ஆளுங்கட்சியை குறை சொல்வதை ஸ்டாலின் வழக்கமாக வைத்திருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடனை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.