திருப்பூரில் நன்கொடை தர மறுத்த பனியன் கம்பனி சூறையாடல்.. இந்து முன்னணியினர் 4 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் நன்கொடை கேட்டு தராததால் பனியன் நிறுவனத்தை சூறையாடிய வழக்கில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஜீவா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவருடைய பனியன் நிறுவனத்தின் இருபுறமும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இரு தரப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் சுரேஷ் ரூ.10 ஆயிரம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மற்றொரு தரப்பினர் தங்களுக்கும் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்க கோரி அவரது பனியன் நிறுவனத்துக்கு சென்று பேச முயன்றார்களாம். ஆனால் சுரேஷை அவர்களால் சந்திக்க முடியவில்லையாம். இதனால் அந்த தரப்பினருக்கு நன்கொடை கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தரப்பினர் சுரேஷ் மீது ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அந்த தரப்பினர் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு இருந்த விநாயகர் சிலையுடன் திடீரென சுரேஷின் பனியன் நிறுவனத்துக்குள் புகுந்தனர்.
அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.இதை தட்டி கேட்ட பனியன் நிறுவன மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, மெக்கானிக் சிவக்குமார் ஆகியோரை அந்த அமைப்பினர் தாக்கினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது கொலைமிரட்டல், அபாய ஆயுதங்களை பயன்படுத்துதல் அத்துமீறி உள்ளே நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல், அடித்து காயப்படுத்துதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் கார்த்திக், ராதாகிருஷ்ணன் உள்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடிவருகிறார்கள்.