டெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி நடேஷின் 4 வயது மகன் லோகேஷ். கடந்த 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து திருப்பூர் மருத்துவமனையில் இருந்து சிறுவன் லோகேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது.
பலி
இதையடுத்து, டெங்கு சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் ,சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து படையப்பா நகர் பகுதியை சேர்ந்த மக்கள் கோபமடைந்து தங்களது பகுதிக்கு குடிநீர், சாலை வசதி , சாக்கடை வசதி கேட்டு பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.
மறியல்
இந்த நிலையில் சிறுவன் லோகேஷ் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளான் என்பதை தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வாரணாசிபாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காய்ச்சல் பரவுதல்
அதனை தொடர்ந்து தமிழக அரசு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக ஊத்துக்குளி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்பு
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில் சுகாதார சீர் கேட்டால் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சல் பாதிப்பில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.