கணவரை பிரிந்து வாழும் 39 வயது சைலஜா.. டாக்டர் வேறு.. செய்ததோ பகீர் 'வேலை..' ஆடிப்போன திருப்பூர்!
திருப்பூர்: பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர், கணவரோடு சண்டை போட்டுக் கொண்டு திருப்பூர் அருகே செய்த பகீர் செயல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையத்தில் கடந்த 25.12.20 அன்று பிற்பகல் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பெண் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார்.
மயக்க நிலையில் இருந்த அக்குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவியளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சந்தேகத்திற்கிடமான பெண்
இந்நிலையில், அன்று (25.12.20) இரவே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு பெண் உளவுவதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அப்பெண்தான் அந்த பெண் குழந்தையை உயிருக்கு ஆபத்தான நிலையில் விட்டுச்சென்றுள்ளார் என்பது தெரிவந்தது.
பெங்களூர் பெண் டாக்டர்
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சைலஜா குமாரி (39) என்பதும், அவர் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்பதும் தெரியவந்தது. இவருக்கும் இவரது கணவர் தர்மபிரசாத் (42) என்பவருக்கும் விவாகரத்து வழக்கு கடந்த ஐந்து வருடமாக நடந்து வருகிறது. இவர்களுக்கு க்யாரா (5) என்ற ஒரே மகள் உள்ளார்.
ஊரை விட்டு கிளம்பிய டாக்டர்
பெங்களூரில் தனது வயதான தந்தை மற்றும் மகளுடன் வசித்துவந்த சைலஜாகுமாரி அதே பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மருத்துவ தொழில் பாதிக்கப்பட்டதால் வருவாய் இன்றி பண நெருக்கடி ஏற்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். இதனால் மனமுடைந்த சைலஜாகுமாரி மருத்துவத் துறையில் வேலை தேடி தனது மகளுடன் பெங்களூரூவிலிருந்து கடந்த 24.12.20 அன்று பேருந்தில் புறப்பட்டு அடுத்த நாள் மைசூரு வந்து அங்கிருந்து சத்தியமங்கலம் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஒரு பாட்டில் சளி மருந்து
பேருந்து பயணம் ஒவ்வாமையால் தனது மகள் வாந்தி எடுத்ததால் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கியுள்ளார். அங்கு மேலும் மனமுடைந்த சைலஜாகுமாரி தனது மகளுக்கு கையில் வைத்திருந்த சளிக்கு கொடுக்கும் சிரப்பை ஒரு பாட்டில் முழுவதும் குடிக்க வைத்துள்ளார். இதில் மயக்கமடைந்த தனது மகளை அப்பகுதியிலிருந்த ஊராட்சி குப்பை பிரிக்கும் கொட்டகை முன்பு படுக்க வைத்துவிட்டு தான் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து எங்கு செல்வது என தெரியாமல் தண்டுக்காரன்பாளையம் சுற்றுப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளார்.
குழந்தை பலி
இதையடுத்து, சைலஜாகுமாரியை சேயூர் போலீசார் கைது செய்து அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் காவலில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. மிகுந்த கவலைக்கிடமான நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பெண்குழந்தை க்யாரா (5) பரிதாபமாக உயிரிழந்தாள்.
பின்னணி என்ன
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கு பின்புதான் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது சளி மருந்தா அல்லது விஷமா என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். குழந்தை இறந்ததை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சேயூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.