தாராபுரம் அருகே காற்றாலையில் பயங்கர தீ விபத்து.. 2 கிமீ தூரத்திற்கு வெடித்து சிதறிய பாகங்கள்
தாராபுரம்: தாராபுரம் அருகே காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டு, பாகங்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாசர்பட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
காலையில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, காற்றாலை கட்டுப்பாடின்றி தாறுமாறாக சுழன்றுள்ளது. காற்றாலை மின் விசிறியின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி செயலிழந்தது. இதனையடுத்து போலீஸாரும், தீயணைப்புதுறையினரும் விரைந்து சென்று அங்கு வசிக்கும் மக்களை எச்சரித்தனர்.
தாராபுரம் பொள்ளாச்சி சாலை இதனால் தற்காலிகமாக மூடப்பட்டது. வெகுநேரமாக கட்டுப்பாடின்றி சுழன்ற காற்றாலையின் இறகுகள், ஒருகட்டத்தில் தீப்பற்றி ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. கியர் பாக்சில் இருந்த எண்ணெய்யும் தீயுடன் சிதறியதால் பெரும் பிழம்பு சிதறியதை கண்ட மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
2 கி.மீ சுற்றளவு வரை காற்றாலையின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடப்பதால் பழைய ஆலைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் கோரிக்கை.
தாசர்பட்டி முதல் தாராபுரம் வரை பாலக்காட்டு கணவாய் வழியாக எந்நேரமும் சீரான காற்று வீசும். இதனால் அங்கு சுமார் 1500 காற்றாலைகள் வரை உள்ளன. இவற்றில் பல 20 முதல் 30 ஆண்டுகள் வரை பழமையானவை என்பதால், அவை அடிக்கடி விபத்திற்குள்ளாகிறது.
பழைய காற்றாலைகளை அதன் நிறுவனத்தினர் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், இப்பகுதியில் காற்றாலைகள் வெடித்து அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.