சவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்!
சவக்குழியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தோண்டி பார்த்தனர்.
Recommended Video
திருப்பூர்: பல்லடம் அருகே குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் புதைக்கப்பட்டது குழந்தை இல்லை!
திருப்பூர்மாவட்டம் பல்லடத்தையடுத்த பெத்தாம்பாளையம் கள்ளிமேடு என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பாறைக்குழி அருகே சிறிய மண் திட்டு இருப்பதை பார்த்தனர். பார்க்க புதியதாக இருந்தது.
அந்த மண்மேட்டில், இறந்தவர்களுக்கு படையல் வைப்பது போல சில பொருட்களை வைத்திருந்தனர். அவை அனைத்தும் பிஸ்கட் பாக்கெட்டுகளாக இருந்தன. அதனால் யாரோ குழந்தையை கொன்று இப்படி ஊருக்கு வெளியே புதைத்துள்ளனர் என்ற தகவல் பரவியது.
இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையிலேயே அந்த மண்மேட்டை தோண்டி பார்க்க முடிவானது. கடைசியில் பார்த்தால், குழிக்குள் ஒரு நாய் புதைக்கப்பட்டிருந்தது. யார் வீட்டிலோ அந்த நாயை செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார்கள்.
நோய்வாய்ப்பட்டு இறக்கவும், வளர்த்தவர்களே கொண்டு வந்து இங்கு புதைத்துள்ளனர். அதனால் எப்போதுமே அந்த நாய்க்குப் பிடித்தமான பிஸ்க்கெட் பாக்கெட்டுகளையும் குழி மேட்டில் வைத்து சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. யார் வீட்டு குழந்தையோ என்ற பதைபதைப்பிலேயே இருந்த போலீசாரும், பின்னர் கொஞ்சம் நிம்மதியானார்கள்.