திருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான ஆனந்தன் எம்.பி-யா?.. சர்ச்சையான திருமண அழைப்பிதழ்
திருப்பூர்: தேர்தல் முடிவுக்கு முன்பே திருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான எம்.எஸ்.எம் ஆனந்தனை எம்.பி என திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக சார்பில் 435 வேட்பாளர்கள், காங்கிரஸ் சார்பில் 420 வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 45 மையங்களில், 36,000 போலீசார், 17,000 ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக இரவு ஆகிவிடும் என கூறப்படும் நிலையில், திருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் மர்பி ராஜா என்பவரின் மகளின் திருமணம் அழைப்பிதழில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை எம்.பி எனக் அச்சிட்டு, விநியோகித்து வருகிறார்.
சமீபத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, தேனி தொகுதியின் எம்.பி எனக் குறிப்பிட்டு தேனியில் உள்ள அன்னபூரணி கோயிலில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கல்வெட்டு மறைக்கப்பட்டது.
அதேபோல விருதுநகர் மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண அழைப்பிதழில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரின் பெயருடன் எம்.பி எனச் சேர்த்து குறிப்பிட்டிருந்தார்கள். தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே, நம்பிக்கையின் அடிப்படையில், இவ்வாறு செய்வது முடிவுக்கு பிறகு மன உளைச்சலை தந்தாலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.