திருப்பூர் அருகே தனியார் பள்ளி போல் அரசு பள்ளி.. ‘ஏ.சி.’ வசதி, ஸ்மார்ட் வகுப்பறை என அசத்தல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் பள்ளியை போல் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளியைப் போல் இங்கும் கராத்தே, யோகா, ஸ்போக்கன் இங்கிலிஷ் உள்பட பல்வேறு கலைகளை கூடுதலாக கற்றுக் கொடுத்து அசத்தி வருகிறார்கள். இந்த பள்ளி அந்த சுற்றுவட்டார மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழகத்தில் 2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்பு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் மாணவர்களை கவருவதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றன. அந்த வரிசையில் அரசு பள்ளிகளும் இடம் பெற்று வருகின்றன. அப்படி ஒரு பள்ளி தான் திருப்பூர் அருகே செயல்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மு.வேலாயுதம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. கடந்த 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டஇப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடி உள்ளது. இந்த பள்ளியில்வேலாயுதம் பாளையம், நெசவாளர் காலனி, ஒத்தப்பனை, செங்கோடம் பாளையம் கிராமங்களை சேர்ந்த 42 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் வேலை செய்து வருகிறார்கள்
இந்த பள்ளி செயல்படும் பகுதியில் 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதனால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைந்து விடும் என்று நினைத்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளியை நவீன தரத்தில் உயர்த்த முடிவு செய்தனர்.
அதன்படி பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறையாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பள்ளியில் குளிர்சாதன வசதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். இந்த பள்ளிக்கு பஸ் வசதி இல்லாத நெசவாளர் காலனி கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களை அழைத்து வர பள்ளி ஆசிரியர்கள் சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆட்டோவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். தனியார் பள்ளிக்கு இணையாக கராத்தே, யோகா, ஸ்போக்கன் இங்கிலிஷ் போன்ற பயிற்சியும் இந்த ஆண்டு முதல் அளிக்க .உள்ளார்களாம் இந்த தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வின்செண்ட் தெரிவித்தார்.