திருப்பூரில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்.. கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.. மீண்டும் ஊரடங்கு?
திருப்பூர்: கொரோனா பாதிப்பு திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மெல்ல அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது.
மாஸ்க் அணியாமல் தனிமனித இடைவெளியைக் கூட பின்பற்றாமல் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரங்கள் காரணமாக வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது.
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் டெல்டா வைரஸ்- ஜப்பானில் ஒரு வாரத்தில் 121% கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
கொரோனா 2ஆம் அலை
அதிலும் குறிப்பாகக் கடந்த மே மாதம் மாநிலத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்திருந்தது. இதனால் நிலைமையைக் கடந்த மே மாதம் இரண்டு வாரங்கள் மாநிலத்தில் முழு ஊரங்டு அமல்படுத்தப்பட்டது. அப்போது வைரஸ் மெல்லக் குறையத் தொடங்கியது.
கட்டுக்குள் வந்த வைரஸ்
அதிலும்கூட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பாதிப்பு முதலில் வேகமாகக் குறைந்தது. ஆனால், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் வைரஸ் பாதிப்பு பெரியளவில் குறையவில்லை. இதனால் தளர்வுகளும்கூட மேற்கு மண்டலத்தில் சற்று தாமதமாகவே அறிவிக்கப்பட்டது. நீண்ட ஒரு போராட்டத்திற்குப் பின்னரே கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்
மாநிலத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறையைப் போல நிலைமை கையை மீறிச் செல்லும் வரை காத்திருக்காமல் முன்கூடிய தேவையான நடவடிக்கைகளை அரசு இயந்திரம் எடுக்கத் தொடங்கிவிட்டது. தலைநகர் சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் வணிக வளாகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்
கொரோனா 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரத் தாமதமான மாவட்டங்களில் ஒன்று திருப்பூர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே திருப்பூரில் வைரஸ் பாதிப்பு 90க்கும் மேலாகவே பதிவாகி வருகிறது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. நேற்றைய தினம் 92 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
பாசிட்டிவ் விகிதம்
மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தமிழ்நாட்டின் சராசரியைவிடத் திருப்பூரில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.3%ஆக உள்ளது. ஆனால், திருப்பூரின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதைவிட அதிகமாக, அதாவது 1.7%ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது என்பதையே கொரோனா பாசிட்டிவ் விகிதம் உணர்த்தும். இது அதிகமாக உள்ளது என்றால் வைரஸ் அதிகம் பரவியுள்ளது என அர்த்தம்.
கூடுதல் கட்டுப்பாடுகள்
இந்நிலையில், திருப்பூரில் வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 46 இடங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் 5 மணி வரை மட்டுமே இயங்கும். அதேபோல கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர மற்ற கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.