அழ வச்சுட்டியேடா செல்லத் தம்பி.. லாரியில் ஏற்றப்பட்டான் சின்னத்தம்பி.. வரகளியாறு செல்கிறான்!
சின்னதம்பி யானைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது
Recommended Video
சென்னை: மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட, சின்னதம்பியை 2 கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் லாரியில் ஏற்றினர். இதையடுத்து சின்னதம்பி முகாமுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மயங்கிய நிலையில் இருந்தாலும் பெரிய அளவில் முரண்டு பிடிக்காமல் சமத்தாக லாரியில் ஏறி கிளம்பி விட்டான் இந்த செல்லத்தம்பி.
சின்னதம்பியை பத்திரமாக பிடிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினரும் ஆயத்தமானார்கள்.
ஆனால் இன்னமும் அவர்களுக்கு யானை போக்கு காட்டிதான் வருகிறது. நேற்று முன்தினம், கரும்பு தோட்டத்தில் இருந்து வாழைத்தோட்டத்துக்கு ஷிப்ட் ஆனான் சின்னதம்பி, அங்கே பயிர்களை மூடி வைக்க ஒரு சாக்குப்பை இருந்தது. அது சின்னதம்பி கண்ணில் பட்டுவிட ஒரே விளையாட்டுதான்.
விளையாட்டு
தும்பிகையால் சாக்கு பையை எடுத்து தலையில் போட்டுக் கொள்வதும் மேலே சுழற்றி வீசி வாலால் பிடிப்பதும், தும்பிக்கையால் இருபுறமும் பிடித்து கொண்டு அடிப்பதும், பின்னங்கால்களால் உதைப்பதும் என தன்னை மறந்து சின்னத்தம்பி விளையாடி கொண்டிருந்தான். இதைப்பார்த்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். மக்களின் கைதட்டல், உற்சாக குரலை கேட்டதும் சின்னதம்பிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பதிலுக்கு சின்னதம்பியும் உற்சாக குரல் எழுப்பியது.
கரும்பு தோட்டம்
ஆனால் இதையெல்லாம் ஒரு புறம் ரசித்தாலும் எப்படி சின்னதம்பியை பிடிப்பது என்பதில்தான் வனத்துறையினரின் கவனம் முழுதும் உள்ளது. நேற்று சாயங்காலம் 4 மணி போல, கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பி வெளியே வந்தான்.
வனத்துறை அலர்ட்
அவனுக்கு வனத்துறையினர் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பலா பழங்களை தந்தார்கள். சாப்பிட்டுவிட்டு எப்படியும் முன்னேறி வரும், அப்போது பிடித்து விடலாம் என வனத்துறையினரும் அலர்ட்டாக இருந்தார்கள். ஆனால் பலாப்பழத்தை சாப்பிட்ட கணமே அடுத்த செகண்ட் கரும்புத் தோட்டத்துக்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் சின்னதம்பி.
நம்பிக்கை
அதனால் சின்னதம்பியை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்றைக்கு எப்படியும் சின்னதம்பியை பிடித்து விடலாம் என்று வனத்துறையினர் நம்பிக்கையுடன் சொல்லி இருந்தனர். அதன்படியே செய்தும் காட்டிவிட்டனர்.
மயக்க ஊசி
கரும்பு தோட்டத்தில் இருந்து மீண்டும் வெளியே வந்த சின்னத்தம்பிக்கு வனத்துறையினர் துப்பாக்கி மூலம் காலை 7 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் இந்த ஊசியை போடுவதற்கே 3 மணி நேர போராட்டம் ஆகிவிட்டது. கலீம் மற்றும் சுயம்பு 2 கும்கிகள் உதவியுடன்தான் இந்த மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
4 முறை முயற்சி
மயக்க ஊசியை செலுத்த முயன்றும் வனத்துறையினருக்கு பிடிகொடுக்காமல் 3 முறை மிஸ் ஆகிவிட்டானாம். முதல் ஊசியை டாக்டர் அசோகன் செலுத்தி உள்ளார். இரண்டாவது ஊசியை சின்னதம்பியின் பின்னங்காலில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தங்கராஜ் பன்னீர்செல்வம் செலுத்தி உள்ளார். திரும்பவும் 3-வது முறையாக தங்கராஜ் செலுத்த முயன்றும் அதுவும் தவறிவிட்டது. கடைசியாக சின்னதம்பி உடலில் xylazine ketamine என்கிற 8 ml மயக்க ஊசியை டாக்டர் அசோகன் சரியாக செலுத்தினார்.
இன்றே பிடிபடும்
ஆனால் இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், மயக்க ஊசி செலுத்திய பின்னும் கரும்பு தோட்டத்துக்குள் சின்னத்தம்பி புகுந்துவிட்டான். அதனால் கும்கிகளின் உதவியுடன் சின்னத்தம்பி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சின்னத்தம்பி மீது ஏறி பாகன் அமர்ந்தார். லாரியில் சின்னதம்பியை ஏற்றுவதற்கு 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. இதில் சுயம்பு என்ற கும்கிதான் சின்னதம்பியின் பின்பக்கத்தில் தனது தும்பிக்கையால் குத்தியே லாரியில் ஏற்ற முயன்றது.
சிறு சிறு பயிற்சிகள்
சின்னதம்பி பிடிபட்டது குறித்து தலைமை வனக்காவலர் கணேசன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சின்னத்தம்பி யானையை பத்திரமாக பிடித்து விட்டோம். இப்போது வரகளியாறு என்ற இடத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம். அங்குதான் யானைகள் முகாமில் சின்னத்தம்பி அடைக்கப்படும். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு சிறு சிறு பயிற்சிகள் மூலம் சின்னத்தம்பி இயல்பு நிலைக்கு வரும்" என்றார்.
லாரியில் ஏற்றினர்
இதனால் சின்னதம்பிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. மயக்க நிலையில் இருக்கும் சின்னதம்பி லாரிக்குள் ஏறவே அடம் பிடித்தது. இதனால் சின்னதம்பிக்கு கரும்பு கொடுத்தனர். பிறகு வாழை தந்தார்கள். ஆனாலும் சின்னதம்பி லாரியில் ஏற மறுத்தது. 2 கும்கிகள் ஒரு பக்கம், 300-க்கும் மேற்பட்டோர் கயிறு கட்டி இழுத்து லாரியில் சின்னதம்பியை ஏற்றும் முயற்சியில் இறங்கினார்கள். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகுதான் சின்னதம்பி லாரியில் ஏற்றப்பட்டது.
மனதை பிசைந்த சோகம்
வரகளியாறு என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சின்னதம்பி பத்திரமாக கொண்டு செல்லப்படும் என்றும், அதுவரை சின்னதம்பியுடன் மருத்துவ குழுகூடவே பயணிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு வாரமா போக்கு காட்டினாலும் சின்னத்தம்பி லாரியில் ஏற்றப்பட்ட காட்சியைப் பார்த்து பலருக்கும் மனதுக்குள் இனம் புரியாத சோகம்.. மனதைப் பிசைந்த சோகத்துடன் செல்லத்தம்பிக்கு அத்தனை பேரும் விடை கொடுத்ததைக் காண முடிந்தது.