'வடிவேலு காமெடி பாணியில்' ஓட்டி பார்ப்பதாக கூறி.. திருப்பூரில் பைக்-ஐ ஆட்டைய போட்ட இளைஞர்
திருப்பூரில் ஓட்டி பார்ப்பதாக கூறி மோட்டார் சைக்கிளை இளைஞர் ஒருவர் திருடிச்சென்றுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் அருகே பல்லடத்தில் மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர், அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்ப்பதாக கூறி அபேஸ் செய்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் திரைப்பட காமெடி போல நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக்கை ஓட்டி பார்த்து தருவதாக கூறி நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமெடியில் பைக்கை அப்படியே திருடிச்செல்வார். இந்த காமெடி காட்சியை போன்றே திருப்பூரிலும் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரபல ஆன்லைன் விற்பனை தளத்தில் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து வந்த மோசடி நபர், பைக்கின் உரிமையாளரிடம் ஓட்டிப் பார்த்து சொல்வதாக கூறி பைக்கோடு எஸ்கேப் ஆகியிருக்கிறார். இது குறித்த முழு விவரங்களை கீழ் காணலாம்.
எப்படி எல்லாம் ஆட்டைய போடுறாங்க.. ஆன்லைன் ஆர்டருக்கு வந்த பரிசுக்கூப்பன்.. நம்பி லட்சத்தை இழந்த நபர்
ஆன்லைனில் விளம்பரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய நினைத்தார். இதற்காக அவர் ஆன்லைனில் தனது மோட்டார் சைக்கிளை விற்க உள்ளதாக விளம்பரப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இவரது ஆன்லைன் விளம்பரத்தை பார்த்த இளைஞர் ஒருவர் அருண்குமாரின் மோட்டார் சைக்கிளை வாங்க விருப்பம் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் வாங்க
அவர் விருப்பம் தெரிவித்ததையடுத்து அருண்குமாரும் அந்த இளைஞரிடம் மோட்டார் சைக்கிளை காண்பிப்பதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லியிருக்கிறார். அதன்படி அங்கு வந்த இளைஞரிடம் அருண்குமார் மோட்டார் சைக்கிளை காண்பித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை நாலாபுறமும் சுற்றி பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளை ஒருமுறை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஓட்டி பார்த்தால் தான் வாங்குவேன்
முதலில் அருண்குமார் இதற்கு அனுமதிக்கவில்லை. எனினும் ஓட்டி பார்த்தால் தான் மோட்டார் சைக்கிளின் கண்டிஷன் எப்படி இருக்கும் என்று தெரியும் என்றும் இதனால் ஓட்டி பார்த்தால் மட்டுமே மோட்டார் சைக்கிளை வாங்குவேன் என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். சரி ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிவிடுவார் என்று அருண்குமாரும் நம்பி மோட்டார் சைக்கிளை கொடுத்துள்ளார். அதன்படி மோட்டார் சைக்கிளை எடுத்துவிட்டு அந்த இளைஞர் சென்றார்.
போலீசில் புகார்
ஆனால் திரும்பி அந்த இளைஞர் வரவே இல்லை. இப்போது வந்துவிடுவார் என்று நினைத்த அருண்குமார் நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த இளைஞர் திரும்பி வரவில்லை. இதன்பிறகே அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது அருண்குமாருக்கு தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் குறித்த எந்த ஆதாரமும் அருண்குமாரிடம் இல்லையாம். இதனால் என்ன செய்வது என்ற தெரியாமல் திகைத்த அருண்குமார் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
கவனத்துடன் இருக்க வேண்டும்
போலீசார் ஓட்டி பார்ப்பதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இளைஞரை தேடி வருகிறார்கள். முன் பின் தெரியாத நபர்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவும் ஆன்லைன் மூலமாக அறிமுகம் ஆகி வருபவர் குறித்த எந்த தகவலும் தெரியாது என்பதால் அவர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருப்பூரில் நடைபெற்ற இந்த மோசடி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.