பறவைக்காய்ச்சல் எதிரொலி... தமிழகத்தில் முட்டை, கறிக்கோழி விலை சரிவு!
திருப்பூர்: கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் முட்டை, கறிக்கோழி விலை சரிவடைந்துள்ளது.
பல்லடம் பண்ணையில் கறிக்கோழி விலை ஒரே நாளில் 14 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 2 கோடி முட்டைகள் வரை தேங்கி இருப்பதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பறவைக்காய்ச்சல் தீவிரம்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திற்கு பரவாமல் தடுக்கும் வகையில் கேரள-தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்லடம் பண்ணை
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரே நாளில் ரூ.14 சரிவு
தற்போது பறவைக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் முட்டை, கறிக்கோழி விலை குறைய தொடங்கி உள்ளது. பல்லடம் பண்ணை கறிக்கோழி விலை ஒரே நாளில் 14 ரூபாய் சரிவடைந்துள்ளது. நேற்று பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 92 ரூபாயாக இருந்தது.அந்த விலை இன்று ஒரே நாளில் 14 ரூபாய் குறைந்து 78 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பண்ணை உரிமையாளர்கள் வேதனை
கடந்த இரண்டு தினங்களில் கேரளாவிற்கு கோழி ஏற்றுமதி செய்யப்படாததால் கறி கோழி தேக்கமடைய துவங்கியுள்ளது. இதன் காரணமாக விலை சரியத்தொடங்கியுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்திலிருந்து கேரளத்திற்கு முட்டைகள் அனுப்பப்படுவது தடைபட்டுள்ளதால், கடந்த 5 நாட்களில் பண்ணைகளில் சுமார் 2 கோடி முட்டைகள் வரை தேங்கியிருப்பதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விற்பனை எப்படி?
தேக்கமடைந்த முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதாகவும், வரும் நாட்களில் முட்டைகள் தேக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கறிக்கோழி விலை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதேபோல் முட்டை விலையும் கணிசமாக குறைந்துள்ளது. பல கடைகளில் முட்டையின் சில்லறை விற்பனை விலையும் குறைவாக உள்ளது. பறவை காய்ச்சல் பீதியால் முட்டை, கறிக்கோழி விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் விலை குறைவாக உள்ளதால் அதிகமானோர் வாங்குகின்றனர் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.