சிஏஏவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. திருப்பூர், தேனியை அதிர வைத்த பாஜக பேரணி.. திமுகவிற்கு எதிராக கோஷம்!
திருப்பூர்: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது.
சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த கலவரத்தில் மொத்தம் 40 பேர் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக பெண்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆதரவு போராட்டம்
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது. சிஏஏ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தீவிரமாக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. டெல்லியில் கூட சிஏஏ ஆதரவு பிரச்சாரத்தை பாஜக செய்த போதுதான் கலவரம் வெடித்தது. தற்போது தமிழகத்தில் சிஏஏ ஆதரவு பிரச்சாரங்கள் தொடங்கி உள்ளது.
தேனி எப்படி
தேனியில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். பாஜக கூட்டணியை சேர்ந்த சில உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். தேனி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து தேனி ஸ்டேட்பேங்க் திடல் வரை பேரணி நடந்தது.
எப்படி தேனி
அதேபோல் திருப்பூரிலும் பாஜக சார்பாக சிஏஏ ஆதரவு பேரணி நடைபெற்றது. திமுக எதிர்ப்பு பேரணி போல இது சிஏஏ ஆதரவு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதில் பேரணியாகச் சென்றவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். சிஏஏவிற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுவதாக திமுக காங்கிரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பல்வேறு அமைப்புகள்
குடியுரிமை சட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து பாஜக நடத்திய போராட்டத்தில் இந்து அமைப்பினர் பலர் பங்கேற்றனர். இந்த பேரணி திருப்பூரில் இன்னும் முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. கோவையிலும் சில இடங்களில் சிஏஏ ஆதரவு பேரணிகள் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.