வெற்றித் தளபதி மு.க.ஸ்டாலின்.. சொன்னது யார்னு பார்த்தீங்களா மக்களே!
திருப்பூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மையிலேயே ஒரு வெற்றித்தளபதி பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூடியுள்ளார்.
மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசின் கொள்கைகளை தீவிரமாக எதிர்க்கும் தலைவர்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். நீட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, காஷ்மீர் என பல விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முழங்கி வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்டாலின் உழைப்புக்கு இலக்கணமாக திகழ்கிறார் எனப் பேசியுள்ளார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மத்திய கயிறு வாரியத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் எப்போதும் மென்மையான போக்கை கடைபிடிப்பவர். பொதுவிடங்களில் தடாலடி கருத்துக்களையோ, மதவெறியை தூண்டும் வகையிலோ பேசாமல் நிதானத்தை பின்பற்றுவார்.
சிக்கலோ சிக்கல்.. எப்படி சிக்கியுள்ளார் பாருங்க ப.சிதம்பரம்.. திகார் சிறைக்கு அனுப்ப வாய்ப்பு?
இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிதான் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்டாலின் வெற்றித்தளபதி என்றும், அவரது உழைப்பு தன்னை போன்ற பலரை இன்னும் உழைக்க வேண்டும் என உணரச்செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உழைப்பின் முலம் ஸ்டாலின் தங்களை வீழ்த்தி விட்டதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
திமுகவும், பாஜகவும் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வரும் சூழலில் மு.க.ஸ்டாலினை உயர்த்திப்பிடித்து பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே சி.பி.ஆர். மனம் திறந்து உண்மையை பேசியுள்ளதாக திருமண மேடையில் இருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
பாஜகவை சேர்ந்த ஒருவர் தங்கள் தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதைக் கேட்டு மணவிழாவில் குழுமியிருந்த திமுகவினர் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.