Chinnathambi: சின்னதம்பிக்கு என்ன தான் ஆச்சு... உடல்நலம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவல்
Recommended Video
திருப்பூர்: காட்டு யானை சின்னத்தம்பியின் செயல்பாடுகள், உடல் நிலை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளன.
5-வது நாளாக உடுமலையில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது. அதே நேரம், சின்னத்தம்பியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கும்கிகளை நண்பர்களாக்கி சின்னத்தம்பி யானை கவலைகளை மறந்து உடல்நலம் தேறி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்துறை விளக்கம்
மேலும், கலீம், மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகளின் துணையுடன் மீண்டும் சின்னத்தம்பியை வனத்திற்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களாக்கிய சின்னதம்பி
இந்த நிலையில் சின்னத்தம்பியை கட்டுப்படுத்தும் பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள கலீம், மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகளை நண்பர்களாக்கி சின்னத்தம்பி சகஜமாக பழகி வருவதால் வனத்துறையினர் அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
முட்புதர் அழிப்பு
நேற்று மாலை புதரிலிருந்து வெளியேறி கரும்பு தோட்டத்திற்குள் சென்றுள்ள நேரத்தைப் பயன்படுத்தி, இதுவரை தங்கி வந்த முட்புதரை ஜேசிபி மூலம் அழித்தனர். இதனால் வசதியான தங்கும் இடம் இல்லாமல் வனபகுதியை நோக்கி சின்னத்தம்பி செல்லும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
கமல்ஹாசன் கருத்து
மிருகங்களின் இடத்தை ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் எனவும், அதற்கான விளைவுகளை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து, 150 கி். மீட்டருக்கு மேல் பயணம் செய்து, வீடுகள், மனிதர்கள், வாகனங்கள் என்று வழி நெடுகிலும் பல விஷயங்கள் இருந்தும் சேதத்தை ஏற்படுத்தாமல், தன் வாழ்விடத்தைத் தேடி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறான் சின்னதம்பி என்று பொதுமக்கள் தெரிவித்து வரும் நிலையில், சின்னதம்பி யானை, கும்கியாக மாற்றப்படும் என்ற முடிவை வனத்துறை கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.