என்னது.. நம்ம நடந்தா அவனும் நடக்கிறான்.. சிரிச்சா சிரிக்கிறான்.. விரட்டிய டிரோன்.. தெறி வீடியோ!
கேரம்போர்டு விளையாடிய சிறுவர்களை டிரோன் விரட்டும் வீடியோ வைரலாகிறது
திருப்பூர்: "என்னதிது.. நம்ம நடந்தா அவனும் நடக்கிறான்.. நம்ம சிரிச்சான் அவனும் சிரிக்கிறான்.. இப்போ நாம நிக்கிறதா, ஓடுறதான்னு தெரியலையே".. வடிவேலுவின் வசனத்துடன் ஒரு காமெடி வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது!!
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.. அப்படி மீறி யாராவது வந்தாலும் அவர்களை போலீசார் கண்காணித்து அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.. சில இடங்களில் நூதன தண்டனையும் தரப்பட்டு வருகிறது.
முக்கியமாக, அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.. அதனால் ட்ரோன் கேமரா மூலமாகவும் மக்கள் நடமாட்டத்தை நம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அப்படித்தான் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தை சோதனை செய்தனர்.
டிரோன்
அப்போது ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியில் சிறுவர்கள் கிட்டத்தட்ட 10 பேர் சேர்ந்து கேரம் போர்ட் விளையாடி கொண்டிருந்ததை கண்டனர்.. டிரோனை பார்த்ததும் சிறுவர்கள் அலறி அடித்து கொண்டு சிதறி ஓடினர். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. அது ஒரு பொட்டல் காடு போல தெரிகிறது.. ஆள் நடமாட்டம் சிறிதும் இல்லை.. இந்த பகுதியில் யாராவது நடமாடுவதும் சந்தேகம்தான்.. செம்மண் புழுதி படிந்த மண்ணில் ஒரே ஒரு மரம் உள்ளது.. நட்ட நடு மைதானத்தில் இருக்கும் அந்த ஒரு மரத்தினடியில் சிறுவர்கள் கேரம்போர்டு விளையாடி கொண்டுள்ளனர்.
கேரம்போர்டு
மயான அமைதி போல் இருந்த அங்கு திடீரென ஸ்பீக்கரில் சத்தம் கேட்கிறது.. அதனால் சுற்றுமுற்றும் பார்த்த அவர்கள் பயந்துபோய் ஆளுக்கு ஒரு பக்கம் விழுந்தடித்து கொண்டு ஓட ஆரம்பிக்கின்றனர்.. உடனே போலீசார் தங்களிடம் இருந்த ஸ்பீக்கரில் சிறுவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர்.. இதில் சிறிது தூரம் ஓடிசென்ற ஒரு சிறுவன், திரும்பவும் ஓடிவந்து, மரத்தடியில் விட்டுவிட்டு சென்ற கேரம் போர்டை வந்து கொண்டு ஓடுகிறான்.
உருவம்
அது அவனுடைய கேரம்போர்டு போலும்.. அதனால்தான் பீதியிலும் மறக்காமல் வந்து கேரம்போர்டை எடுத்துள்ளதாக தெரிகிறது.. ஆனால் அந்த கேரம்போர்டை தன்மீது மறைந்து கொண்டு நட்ட நடு மைதானத்திலேயே உட்கார்ந்துவிட்டான். போர்டு மறைத்துவிட்டால் தன் உருவம் தெரியாது என்று நினைத்து விட்டான் போலும்.. விடுவார்களா நம் போலீசார்.. ட்ரோனிலேயே அவனை விடாமல் சுற்றி சுற்றி வந்தனர்.. இதனால் நடுங்கிய சிறுவன், கேரம் போர்டை தூக்கி கொண்டு ஓடினான்.
செருப்பு
வழியிலேயே அவன் செருப்பு கழண்டு விழுந்தது.. ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் போர்டை கீழே வீசிவிட்டு தெறித்து தொடர்ந்து ஓட ஆரம்பிக்கிறான். சிறுவர்கள் அனைவருமே ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் போலும்.. அவரவர் வீட்டுக்குள் போகும்வரை ட்ரோன் விடவில்லையே.. பின்னாடியே துரத்தி கொண்டு போனது.. எல்லாரும் வீட்டிற்குள் புகுந்து கொண்டபிறகுதான் திரும்பியது.
வைரல் வீடியோ
இந்த காட்சிகளைதான் போலீசார் வெளியிட்டுள்ளனர்... இது எச்சரிக்கை விழிப்புணர்வுக்காகதான் வெளியிட்டுள்ளனர் என்றாலும் மானே, தேனே போன்ற அம்சங்களை சேர்த்து வடிவேலு டயலாக்கையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.. "என்னதிது.. நம்ம நடந்தா அவனும் நடக்கிறான்.. நம்ம சிரிச்சான் அவனும் சிரிக்கிறான்.. இப்போ நாம நிக்கிறதா, ஓடுறதான்னு தெரியலையே".. வடிவேலுவின் வசனமும் கலக்கல் காட்சியும் இணைந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலக்கல் போலீசார்
அதிலும் அந்த கேரம்போர்டு சிறுவனை ட்ரோன் துரத்தி பிடிக்க... அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓட.. டப்பிங் வசனங்கள் பின்னணியில் ஒலிக்க... என சோஷியல் மீடியாவே இந்த வீடியோவினால் களை கட்டி உள்ளது! நம் போலீசாரிடம் சீரியஸ் தன்மை மட்டுமில்லாமல், அடிக்கடி இப்படி காமெடியும் செய்து மாஸ் காட்டுகிறார்கள்!!