ரெட் லிஸ்டில் திருப்பூர்.. 2 வழிகளில் பரவிய கொரோனா.. 2 நாட்களில் வேகம் எடுத்தது எப்படி?.. பின்னணி!
திருப்பூர்: கொரோனா வைரஸ் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு வழிகளில் தீவிரமாக பரவி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலை
சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 126 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் திருப்பூரில் 79 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று முதல் நாள் அதிகபட்சமாக திருப்பூரில்தான் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் எங்கு?
திருப்பூரில் காங்கேயம் ரோடு, இந்திராநகர், மங்கலம், அவினாசி பெரியதோட்டம், ரேணுகாநகர், குமரானந்தாபுரம், தேவராயம்பாளைம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குதான் மக்கள் கொத்து கொத்தாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் இங்கு மொத்தமாக சீல் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் வெளியே வரவே கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணம் 1
கடந்த இரண்டு நாட்களாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு வழிகளில் தீவிரமாக பரவி உள்ளது. அங்கு டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலம் ஒரு பக்கம் கொரோனா பரவி உள்ளது . திருப்பூரில் இருந்து மொத்தம் 59 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர். இவர்கள் எல்லோரும் தாமாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீவிரமாக பரவியது
இதையடுத்து இவர்கள் திருப்பூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் முதலில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதன்பின் இன்னும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இந்த மாநாடு மூலம் திருப்பூரில் சில பகுதிகளில் கிளஸ்டர் பரவல் ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் முதல் காரணம். இன்னொரு காரணம்
வேறு காரணம்
லண்டன் சென்று திருப்பூர் வந்த தொழிலதிபர் ஒருவருக்கு கொரோனா வந்தது . இவர் மூலம் இவரின் உறவினர்கள், சில ஊழியர்கள் , இன்னும் சில தொழிலாளர்களுக்கு கொரோனா வந்தது. இவரிடம் இருந்து 5 பேருக்கு கொரோனா பரவியது. அதன்பின் 11 பேருக்கு கொரோனா பரவியது. தற்போது இவரிடம் இருந்து மட்டும் 26 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. திருப்பூரில் கொரோனா தீவிரமாக பரவ இந்த நபர் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
ரெட் லிஸ்ட்
இந்த இரண்டு வழிகளில்தான் திருப்பூரில் கொரோனா தீவிரமாக பரவியது. இதனால் திருப்பூரில் தமிழ்நாட்டில் ரெட் லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் கொரோனா காரணமாக சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று மூன்று வண்ணங்களில் பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் திருப்பூர் மூன்றாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.