ஐயயயயோ.. எங்கம்மா போய்ட்டீங்க.. சாகடிக்கிறாங்கம்மா.. காப்பாத்துங்கம்மா.. அலற விட்ட திருப்பூர் போலீஸ்
கொரோனாவைரஸ் விழிப்புணர்வு வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்
திருப்பூர்: "காப்பாத்துங்கம்மா.. என்னை போட்டு இப்படி சாகடிக்கிறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்.. அம்மா எங்கம்மா இருக்கே..." என்ற கதறல் குரலுடன் ஒரு காமெடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்க் அணியாமல் பைக்கில் வந்த 3 பேரை பிடித்து, திருப்பூர் போலீசார் ஆம்புலன்ஸில் ஏற்றியதுடன், 3 பேருக்குமே ஒரு ட்விட்ஸ்ட் வைத்து வித்தியாசமாக கவனித்துள்ளனர். வடிவேலு & மீம்ஸ்களுடன் சேர்த்து போலீசாரே இதை விழிப்புணர்வு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
எல்லாரும் மாஸ்க் போட வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது.. அப்படி மாஸ்க் இல்லாமல் யாராவது வெளியே நடமாடினால் அவர்களை பிடித்து நூதன தண்டனையை போலீசார் தந்து வருகிறார்கள்.. சில நேரங்களில் இந்த தண்டனைகளை வீடியோக எடுத்து பொதுமக்களுக்காக விழிப்புணர்வாகவும் பயன்படுத்தி வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.. அதில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுகொண்டுள்ளனர்.. 3 இளைஞர்கள் பைக்கில் வருகிறார்கள்.. அவர்கள் யாருமே ஹெல்மட்டும் போடவில்லை.. மாஸ்க்கும் போடவில்லை.
மாஸ்க் எங்கே?
அவர்களை ஓரங்கட்டிய போலீசார் "மாஸ்க் எங்கே" என்று கேட்கிறார்கள்.. 3 பேரும் திருதிருவென விழிக்கிறார்கள்.. பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற சொல்கிறார்கள்.. இதனால் தயங்கியபடியே இளைஞர்கள் நிற்க மிரட்டி உள்ளே ஏற்றப்படுகின்றனர்.. அந்த ஆம்புலன்ஸில் ஏறியபோதுதான் உள்ளே ஒருவர் உட்கார்ந்திருப்பதை கவனிக்கின்றனர்.
ஆம்புலன்ஸ்
ஒன்றும் புரியாமல் ஆம்புலன்ஸில் உட்கார போகும்போது, "அவர் கொரோனா பேஷன்ட்.. அங்க போய் உட்காருங்க" என்று போலீசார் 3 பேருக்கும் அடிவயிற்றில் அள்ளு கிளம்புகிறது.. அந்நபரை பார்த்ததும் பதறியடித்து கொண்டு ஆம்புலன்ஸில் இருந்து குதித்து ஓடுகிறார்கள்.. அவர்களை போலீசார் பிடித்து இழுத்து வந்து திரும்பவும் ஆம்புலன்சில் வலுக்கட்டாயமாக ஏற்றி விடுகின்றனர்.. திரும்பவும் ஆம்புலன்ஸ் ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
இளைஞர்கள்
கொரோனா பாதித்தவர்போல் சித்தரிக்கப்பட்ட நபரோ, அவர்கள் 3 பேரின் அருகில் செல்ல முயற்சிக்கிறார்.. அதை பார்த்தும் இளைஞர்கள் கத்தி கூச்சலிடுகிறார்கள்.. மரண பீதி இளைஞர்களின் கண்களில் தெரிகிறது.. இளைஞர்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் விதமாகவே இப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது.. அதனால்தான் ஜீப்பில் ஏற்றாமல், ஆம்புலன்ஸை செட் செய்து வைத்திருந்தனர் போலீசார்.
தாவுடா.. தாவு..
"காப்பாத்துங்கம்மா.. என்னை போட்டு இப்படி சாகடிக்கிறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்.. அம்மா எங்கம்மா இருக்கே..." என்றும் "தாவுடா.. தாவு.. எங்கே தாவறது, நானே தொங்கிட்டு இருக்கேன்..." என்று கொஞ்சம் வடிவேலு டயலாக், கொஞ்சம் டி.ஆர். பாட்டு, கொஞ்சம் மீம்ஸ், கொஞ்சம் டிக்டாக், என எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து அட்டகாசமான ஒரு விழிப்புணர்வு வீடியோவாக மாற்றி வெளியிட்டுள்ளனர்!! இதுதான் இப்போது டிரோல் செய்யப்பட்டு, வைரலாகி வருகிறது. ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு இதை பார்த்து நல்லா பொழுதும் போகிறது!!