இடதும் இல்லாமல் வலதுமில்லாமல் மய்யமாக சென்றால் லாரியில் தான் மோத வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட்
திருப்பூர்: இடதும் இல்லாமல் வலதுமில்லாமல் மய்யமாக சென்றால் லாரியில் தான் மோத வேண்டியிருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய திருப்பூர் ஈ எஸ் ஐ மருத்துவமனையை கட்ட முடியாது என மாநில அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பது கேளிக்கூத்தான ஒன்று என்றும் முத்தரசன் விமர்சித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் என இரண்டு நாட்களாக நடந்தது. இதை தொடர்ந்து நேற்ற மாநில குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கூட்டம் நடந்தது.
விவசாயிகளுக்கு ஆதரவு
இந்த கூட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பது எனவும்,வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், கொரோனா காலத்தில் உயிரை துச்சமென பணியாற்றிய மருத்துவ, சுகாதார பணியாளர்கள்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தடுக்ககூடாது
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசுகையில்,
தருமபுரி லோக்சபா உறுப்பினர் செந்தில்குமார் தொகுதி முழுவதற்கும் செல்வது மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று ஆறுதல் தெரிவிப்பது உள்ளிட்டவை அவரது அடிப்படை உரிமை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கடமையும் கூட. மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய வகையில் சேவையாற்ற செல்லும் பொழுது அதை தடுத்து நிறுத்துவது ஊருக்குள் வரக்கூடாது என தடுப்பது போன்ற செயல்கள் ஒரு ஜனநாயக விரோத செயலாகும். இத்தகைய செயலை யாராக இருந்தாலும் மேற்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட அநாகரீகமான அரசியல் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு அரசியல் நாகரிகத்தின் உச்சம் என்று சொல்லலாம் அப்படிப்பட்ட மாநிலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
விவசாயி தான்
முதல்வர் எடப்பாடியார் ஒரு விவசாயி என்பதை நாம் நன்கு அறிவோம் ஆனால் அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக மோடி அரசு கொண்டு வந்து இருக்கக்கூடிய விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்க்க முடியாமல் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
முதல்வர் எடப்பாடியார் ஒரு விவசாயி என்பதை நாம் நன்கு அறிவோம் ஆனால் அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக மோடி அரசு கொண்டு வந்து இருக்கக்கூடிய விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்க்க முடியாமல் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
இதனால் தான் எடப்பாடியார், தமிழ்நாட்டு விவசாயிகள் போராடவில்லை என்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் போராடுகிறார்கள் என்றும் கூறுகிறார். அண்மை காலமாக சென்னையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டார் மாநில முதலமைச்சர் துணை முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியை அரசியல் மேடையாக ஆக்கினார் அது ஏற்கனவே நாங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறோம்.
உரிமை உண்டு
அரசியல் கட்சிகளை யாரும் தொடங்குவதற்கு உரிமைகள் உள்ளது. புதிதாக கட்சி தொடங்கப் போவதாக அறிவிக்கிறார் ஒருவர்,இன்னொருவர் தொடங்கிவிட்டார். உலகம் முழுவதும் இரண்டே இரண்டுதான் ஒன்று இடதுசாரி கொள்கை மற்றொன்று வலதுசாரி கொள்கை இந்த ரெண்டு கொள்கையை தவிர்த்து மூன்றாவதாக ஒரு கொள்கை இருக்க முடியாது
கமல் குறித்து தாக்கு
ஆனால் கமல் மய்யம் என்று சொல்கிறார், வாகனத்தை ஓட்டுவது இடதுபுறமாக தான் செல்ல வேண்டும் விதி தவிர்க்க முடியாமல் போனால் அக்கம் பக்கம் பார்த்து வலதுபுறமாக செல்லலாம். ஆனால் இரண்டுமின்றி நேராக சென்றால் எதிரே வருகிற லாரியில் மோதி விபத்துக்குள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.. பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஈ எஸ் ஐ மருத்துவமனையை திருப்பூரில் கட்ட வாய்ப்பு இல்லை
என்று மாநில அமைச்சர் ஓ.எஸ் மணியன் மறுப்பது என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது" இவ்வாறு கூறினார்.