கண்ணா.. 2 லட்டு தின்ன ஆசையா... ஆட்டோ டிரைவருக்கு ஒரே நேரத்தில் அடிச்சது யோகம்
ஒரு செல்லில் இரண்டு சிம் போட்டு பேசுவது இந்தக்காலம். ஆனால் இரண்டு பெண்களை திருமணம் முடித்து வாழ்வது இயலாத காரியம்.
திருப்பூர்: ஆட்டோ டிரைவர் ஒருவர் இரண்டு காதலிகளையும் விட்டு விட்டு ஏமாற்ற நினைத்த நேரத்தில் இருவருமே விடாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு செல்லில் 2 சிம் போட்டு பேசுவது போல ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை கரம் பிடித்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு என்று சொன்னாலும் இனி இருவரையும் ஒரே வீட்டில் வைத்து சமாளிப்பதில் தான் இருக்கிறது அவரது சாமர்த்தியம்.
தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், ஆட்டோ டிரைவர். சவாரி போகும் போது தன்னுடைய ஆட்டோவில் ஏறிய சுந்தரி மீது பார்வை விழ, காதல் மணியடித்தது. பார்த்த முதல்நாளில் என்று பாடித்திரிந்தனர். அந்த சுந்தரிதான் கடந்த 29ஆம் தேதி முதல் மாயமானார். சுந்தரியின் தந்தை போலீசில் புகார் கொடுக்க, தாராபுரம் காவல்நிலைய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரு தினங்களுக்கு முன்பு தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு இளைஞருடன் சுந்தரி நின்று பேசிக்கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரியவரவே, விரைந்து சென்று சுரேஷையும், சுந்தரியையும் பிடித்தனர். அப்போது அங்கிருந்த இன்னொரு பெண்ணையும் கூட கூட்டிக்கொண்டு வருவேன் என்று அடம் பிடித்தார் சுரேஷ். இது புதுசா இருக்கே என்று ஆச்சரியப்பட்ட போலீசார், மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு வந்து விசாரித்தனர்.
ஒரே செல்லுல 2 சிம்
ஆட்டோ டிரைவர் சுரேசிற்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 பெண்களுடன் ஒரே நேரத்தில் காதல் ஏற்பட்டது. ஒருவர் சுந்தரி 19 வயதாகும் பருவப்பெண். மற்றொருவர் திருமணமாகி கணவன் மரணமடைந்தவர். காலையில் சுந்தரி மாலையில் இன்னொரு பெண் என்று ஷிப்ட் போட்டு பழக ஆரம்பித்தார்.
யாரை திருமணம் செய்வது
இரண்டு பெண்களிடமும் காதலோடு பழகினார் சுரேஷ். ஆனால் யாரை திருமணம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இருவரையும் விட்டு விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தாராம் சுரேஷ். இந்த தகிடுதத்தம் ஒரு கட்டத்தில் இரண்டு பெண்களுக்கும் தெரியவந்தது.
ஜோடி சேர தயார்
சுரேஷ் விவகாரம் இரண்டு பெண்களுக்குமே தெரிந்தால் இருவருமே சிண்டை பிடிப்பார்கள், தனக்கு அடிவிழும் என்று நினைத்தார் சுரேஷ். ஆனால் நடந்தது வேறாக இருந்தது. சுரேஷை திருமணம் செய்து கொள்ள இருவருமே தயாராக இருந்தனர். பெற்றோர்களை விட்டு விட்டு வீட்டை விட்டு கடந்த வாரம் கிளம்பினர்.
இருவருக்கும் தாலி ரெடி
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று யாரோ சுரேசிடம் கேட்டது போல இருந்தது. உடனே குஷியான சுரேஷ் இரண்டு பெண்களுடனும் பழனிக்கு கிளம்பினார். அங்கே ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டினார். கோவை செல்வதற்காக தாராபுரம் வந்தபோதுதான் போலீசில் சிக்கினர்.
கணவனுடன் போக சம்மதம்
பெண்களின் பெற்றோர்களுக்கு தகவல் கூறி போலீசார் வரவழைத்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கணவனை விட்டு விட்டு வர இரண்டு பெண்களுமே சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி இருவரையும் சுரேஷ் உடன் செல்ல அனுமதித்தனர். சுரேசும் தனது காதல் மனைவிகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ஒரு பெண் கிடைப்பதே பெரும் பாடாக இருக்கும் நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.