நீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி
திருப்பூர்: தேமுதிக சார்பில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். நீண்ட காலத்துக்கு பிறகு அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேமுதிக என்ற கட்சியை 2005-ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கினார். இதையடுத்து 2006-ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இதையடுத்து 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளில் வென்றார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் சட்டசபையில் நடந்த கருத்து மோதலை தொடர்ந்து அந்த கூட்டணி பிரிந்தது. ஜெயலலிதாவையே எதிர்த்த விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோவாக காட்சியளித்தார்.
பாஜக
இதையடுத்து 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக.
சின்ன கவுண்டர்
அந்த ஆண்டு நடந்த தேர்தலையொட்டி ஜெயலலிதாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய அமைச்சர்களுக்கும் செம கவுன்ட்டர் கொடுத்தார் இந்த "சின்ன கவுண்டர்".
தேமுதிக வெல்லவில்லை
குறிப்பாக நத்தம் விஸ்வநாதனுக்கு நத்தம்... என்று கூறி கவுன்ட்டர் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. விஜயகாந்த்தை எல்லோரும் பிரசார பீரங்கியாகவே பார்த்தனர். இத்தனை பிரச்சாரத்திற்கு பிறகும் தேமுதிக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
கண்ணீர் அஞ்சலி
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றார் விஜயகாந்த். அத்துடன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதும் திரும்புவதுமாக இருந்தார். பின்னர் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதி மறைந்தார். அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்த் வீடியோ மூலம் கருணாநிதிக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி சமாதி
பின்னர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் வராததுமாக அதிகாலையிலேயே கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரை நிர்வாகிகள் கைத்தாங்கலாக பிடித்து சென்றனர். இதையடுத்து எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் விஜயகாந்த்.
பிறந்தநாள் விழா
2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட சென்னையில் வேனில் இருந்தபடியே அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். இதையடுத்து தனது பிறந்தநாள் விழாவில் பள்ளிக்கு சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும்போது எழுந்த விஜயகாந்த் சற்று தடுமாறி கீழே விழுந்தார்.
தொண்டர்கள் மனவேதனை
இதை டிவியிலும் நேரிலும் பார்த்த தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் மனவேதனை அடைந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆரவாரம்
அதன்படி திருப்பூரில் அந்த மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தொண்டர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.