திருப்பூர் ரோட்டில் திகில் சம்பவம்.. திமுக பிரமுகரை வழிமறித்து.. விரட்டி விரட்டி..உறைந்துபோன மக்கள்
திருப்பூரில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்
திருப்பூர்: ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த திமுக பிரமுகரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து.. பொதுமக்கள் முன்னாடியே அரிவாளால் விரட்டி வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்துள்ளது. இந்த சம்பவம் திருப்பூரை உறைய வைத்துள்ளது.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். திமுக மாணவரணி அமைப்பில் இருந்தவர். கல்லூரி சாலையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். அதனால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் உட்பட நிறைய பேருக்கு வட்டிக்கு பணம் அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரி சாலையில், ஐயப்பன் கோயில் அருகே சாலையில் பாலமுருகன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் கைகளில் அரிவாள் உட்பட பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்தனர்.
திடீரென பாலமுருகனை வழிமறித்து அவர்கள், சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாலமுருகன், அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் நிலைதடுமாறி ரோட்டிலேயே ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்தார்.
காங்கிரஸ் ஆசிர்வாதத்தில் பாஜக ஆளுகிறது.. தமிழிசை போட்டோவை கலாய்த்த டிஆர்பி ராஜா
இவ்வளவும் பொதுமக்கள் கண்முன்னாடியே நடந்தது. இதையடுத்து, அந்த கும்பல் பைக்கில் ஏறி அவிநாசி சாலை வழியாக தப்பி சென்றுவிட்டனர். தகவலறிந்து வடக்கு போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணையில் இறங்கி உள்ளனர். பரபரப்பான சாலையில், திமுக பிரமுகரை வெறி கொண்டு பழிதீர்த்த கும்பல் யார் என்று தெரியவில்லை.