திருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா
திருப்பூர்: திருப்பூர் திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் அண்மையில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய நபர்களிடம் இருந்து பொறுப்புகளை பறிக்க திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.
திருப்பூர் மாவட்ட திமுக வர்த்தக அணிச் செயலாளர் ராஜ்மோகன் குமார் போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜின் வலது கரமாக திகழ்பவர். இந்நிலையில் ராஜ்மோகன் குமார் செய்த சட்டவிரோத செயல்களில் மாவட்டச் செயலாளர் செல்வராஜுவுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் முடிந்தும், முடியாததுமாக போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகியுள்ள ராஜ்மோகன்குமார், செல்வராஜை இலங்கை அழைத்துச்சென்றார். இதனிடையே அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியது தொடர்பாக செய்தி தொலைக்காட்சிகளில் எல்லாம் இணைந்து பேட்டி கொடுத்தனர். இன்று அந்த பேட்டி தான் அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கியூ பிரிவு போலீஸாருக்கு ராஜ்மோகன் குமார் விவகாரத்தை எளிதாக விடும் எண்ணம் இல்லை. மேலிடத்து உத்தரவும் அப்படித்தான் அவர்களுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜிடம், ராஜ்மோகன்குமாருடன் இலங்கை சென்றது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே கட்சியை சர்ச்சைகளில் சிக்கவைக்கும் நபர்களுக்கு கல்தா கொடுக்கும் முடிவில் இருக்கிறதாம் தலைமை. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கும் சூழலில் ஒரு சில பிரமுகர்களால் கட்சிக்கும் சேர்ந்து களங்கம் ஏற்படுவதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் அரசியல் செய்யும் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு மீண்டும் மாவட்டத்தில் பவர்புல் பொறுப்பு தரப்படலாம் எனக் கூறப்படுகிறது.