போலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்
சென்னை: திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்த ராஜ்மோகன் குமார் கடந்த வாரம் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இயக்குநர் சற்குணத்தின் களவாணி-2 படத்தில் கதாநாயகி ஓவியாவுக்கு அப்பாவுக்கு நடித்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட திமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அணி, முன்னாள் மேயர் செல்வராஜ் அணி என இரண்டு அணிகள் உள்ளன. அதில் செல்வராஜ் அணியை சேர்ந்தவர் போலி பாஸ்போர்ட் தயாரித்த ராஜ்மோகன் குமார்.
திருப்பூரில் உள்ளாடை உற்பத்தி நிறுவனம் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வரும் அவர், இதுவரை 7 பேருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு பாஸ்போர்ட்டுக்கு 28 லட்சம் ரூபாய் என அவர் விலை நிர்ணயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. முறைகேடான காரியத்தில் ஈடுபட்டதால் ராஜ்மோகன் குமாரை கட்சி கட்டம் கட்டிவிட்டது.
இதனால் முன்னாள் மேயர் செல்வராஜுக்கு கை ஒடிந்தது போல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் மேயர் செல்வராஜுடன் எப்போதும் இருப்பவர் ராஜ்மோகன் குமார். அண்மையில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பின் போது கூட ராஜ்மோகன் குமாரும், செல்வராஜும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறித்து அனைத்து ஊடகங்களிலும் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜ்மோகன் குமாரின் தில்லாலங்கடி வேலைகள் குறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பல தகவல்களை காவல்துறைக்கு புட்டு புட்டு வைத்துள்ளார்களாம். செல்வராஜுடன் அவர் சேர்ந்து போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல என்றும், கடந்த தேர்தலில் வெள்ளக்கோவில் சாமிநாதனின் வெற்றியை தடுத்ததில் ராஜ்மோகனின் பங்கு முக்கியமானது எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்.