ரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு? பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூர்: 10 ரூபாய் நாணயங்களை வாங்கவேண்டாம் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு திருப்பூர் மாநகர போக்குவரத்து கிளை மேலாளர் உத்தரவிட்டது போன்ற புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்களில் பரவிவருகிறது. ஏற்கனவே மக்கள் வதந்தி காரணமாக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வந்த நிலையில் அந்த வதந்தி இப்போது தான் ஓய்ந்துள்ளது. இந்த சூழலில் போக்குவரத்து மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக பரவிய புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவிய வாட்ஸ்அப் வதந்தியால் நாடு முழுவதும் மக்கள் 10 ரூபாய் நாணயங்களை கடந்த ஆண்டு வாங்க மறுத்தனர். இது முற்றிலும் வதந்தி என்றும் எல்லா வகையான 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.
எனினும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் பிரச்னை தீவிரமானது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சட்ட விரோதம் என எச்சரிக்கை விடப்பட்டது. இதன் பிறகு வதந்திகள் குறைந்து மக்கள் மெல்ல மெல்ல 10 ரூபாய் நாணயங்களை வாங்க ஆரம்பித்தனர். இப்போது எந்த பிரச்னையும் இல்லாமல் 10 ரூபாய் நாணயம் தமிழகத்தில் புழகத்தில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் திருப்பூர் கிளை போக்குரத்து மேலாளர் பேருந்து நடத்துனர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது போன்ற புகைப்படம் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. அந்த வாட்ஸ் அப் பதிவில், "நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும் போது பயணிகள் கொடுக்கும் ரூ.10 நாணங்களை முடிந்தவரை தவிர்க்கவும்.தவறும் பட்சத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும் போது ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடனத்துனர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகலை பார்த்து பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தால்தான் உண்மை நிலை தெரியும்.