5 மாநில சட்டசபை தேர்தல் தேதி மார்ச் 7ல் அறிவிக்க வாய்ப்பு : பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
மார்ச் முதல் வாரத்தில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும் என்று தெரிகிறது.
திஷ்பூர்: மார்ச் மாதத்தின் முதல்வாரத்தில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் தேமாஜியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அசாம் உள்ளிட்ட சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சி கிடையாது.
ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடுமையான சவாலை கொடுக்கப் போகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் அதிமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு இன்று பெரும்பான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்தது.
ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் மே 15ஆம் தேதிக்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும். இந்த தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு!
அங்கு ரூ.3,222 கோடியில் உருவாக்கப்பட்ட 3 பெட்ரோலிய திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்பின் தேமாஜி நகரில் ரூ.45 கோடியில் அமைய உள்ள தேமாஜி பொறியியல் கல்லூரி, ரூ.55 கோடியில் உருவாக உள்ள சால்குச்சி பொறியியல் கல்லூரிக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தேமாஜியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, சுதந்திரத்துக்குப் பின், அசாம் மாநிலத்தின் வளர்ச்சியையும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியையும் இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் புறக்கணித்துவிட்டனர். டெல்லிக்கும் திஸ்பூருக்கும் இடையே வெகு தொலைவு இருந்ததாக இதற்கு முன் ஆண்டவர்கள் நம்பினர். ஆனால், இப்போது டெல்லி வெகு தொலைவில் இல்லை. உங்கள் வீட்டு வாசலுக்கு வந்துள்ளது என்றார்.
அசாம் மாநிலம் செழுமையான கச்சா எண்ணெய் வளம் கொண்டது. ஆனால், 2014ஆம் ஆண்டுவரை இங்கு 40 சதவீத குடும்பங்கள் மட்டும்தான் சமையல் கேஸ் இணைப்பு வைத்திருந்தன. ஆனால், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் சமையல் கேஸ் இணைப்பு வைத்துள்ளனர். ஒரு கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அசாம் உள்ளிட்ட சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றார். வரும் மார்ச் 7ஆம் தேர்தல் தேதி பற்றிய அறிவினை தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் 4ஆம் தேதி வெளியானது என்றும் குறிப்பிட்டார்.
மோடியின் பேச்சு மூலம் ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.