அமராவதிக்குள் சென்ற சின்னத்தம்பி.. யானையை காண குவியும் மக்கள்.. 2 கும்கி வரவழைப்பு!
திருப்பூரில் சுற்றி திரியும் ஒற்றையானையான சின்னத்தம்பி தற்போது அமராவதி கிராமத்திற்குள் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
திருப்பூர்: திருப்பூரில் சுற்றி திரியும் ஒற்றையானையான சின்னத்தம்பி தற்போது அமராவதி கிராமத்திற்குள் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
சின்னத்தம்பி..இந்த அழகான பெயர் கொண்ட அழகான ஒற்றையானைதான் தற்போது தமிழகத்தின் தலைப்புச் செய்தி. இது ஒற்றையானையாக விடப்பட்டதில் இருந்து இந்த நொடி வரை செய்திகளில் டாப் டிரெண்டில் இடம் பிடித்து இருக்கிறது.
இந்த யானையை பிடிக்க கூடாது என்று மக்களே கூறும் அளவிற்கு இதற்கு பெரிய ரசிகர் படையே இருக்கிறது. சின்னத்தம்பி ஆர்மியான இது சின்னத்தம்பி மீட்புக் குழு என்று அழைக்கப்படுகிறது.
என்ன நடந்தது
கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில்தான் இந்த சின்னத்தம்பி இருந்தது. ஆனால் இந்த சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது. திடீர் என்று கடந்த ஜனவரி 25ம் தேதி வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். பெரிய போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி கொடுக்கப்பட்டு இது இடமாற்றப்பட்டது.
மீண்டும் வந்தது
ஆனால் குடும்பத்தை பிரிந்த இந்த சின்னத்தம்பி, டாப்சிலிப் காட்டில் இருந்து தப்பித்து மீண்டும் குடும்பத்தை தேடி வந்தது. திருப்பூருக்குள் வந்த யானை கோட்டூர், வரகாளியாறு என்று கிராமம் கிராமமாக சென்றது. தற்போது உடுமலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுற்றி வருகிறது. கடந்த 2 நாட்களில் இது 100கிமீ தூரம் வரை பயணித்து இருக்கிறது.
இப்போது எங்கு
இப்போது இந்த சின்னத்தம்பி யானை அமராவதி கிராமத்திற்குள் சென்றுள்ளது. அமராவதி சர்க்கரை ஆலைக்கு பின் சின்னத்தம்பி சுற்றி வருகிறது. சர்க்கரை ஆலையில் உள்ள கரும்புகளை தின்றுவிட்டு, அதற்கு பின் இருக்கும் குட்டையில் இது ஓய்வு எடுத்து வருகிறது.
மக்கள் ஆர்வம்
இந்த சின்னத்தம்பி யானையை பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதை பார்க்க அங்கு பலர் குவிந்து வருகிறார்கள். இதனால் தற்போது அந்த அமராவதி கிராமம் சுற்றுலாத்தளம் போல மாறி இருக்கிறது.
பிடிக்க வாய்ப்பு
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் சின்னத்தம்பி யானையை கண்காணித்து வருகிறார்கள். 2 கும்கி யானையை வைத்து சின்னத்தம்பியை பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலீம் மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகளை வைத்து சின்னத்தம்பியை பிடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இன்று இரவில் இந்த யானை பிடிபட வாய்ப்புள்ளது.