காங்கேயம் மல்லுக்கட்டு... தயங்கும் தனியரசு... தாராளம் காட்டும் வெள்ளக்கோவில் சாமிநாதன்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் கொரோனா கால நிவாரணப் பணிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தனியரசு தயக்கம் காட்டும் நிலையில், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாராளம் காட்டி வருகிறார்.
காங்கேயம் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காளை தான். காங்கேயம் காளை எந்தளவிற்கு பிரபலமோ அதே அளவு அரசியலிலும் காங்கேயம் தொகுதி முக்கியத்துவம் பெற்றது எனக் கருதலாம். ஏனெனில் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு தொகுதிகளில் காங்கேயமும் ஒன்று.
ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சர் பதவியேற்ற போது அவரை வெற்றி பெற வைத்த தொகுதி என்பதால் காங்கேயம் எப்போதுமே அதிமுகவுக்கு ஸ்பெஷல் தான். திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியாரை வீழ்த்தி ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த காங்கேயம் பின்னர் அதிமுகவின் கோட்டையாக மாறியது.
இந்நிலையில் அதனை திமுகவின் கோட்டையாக மாற்ற பம்பரமாக சுழன்று வருகிறார் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன். தனது சொந்த கிராமமான முத்தூரை உள்ளடக்கிய காங்கேயம் தொகுதிக்குள் மட்டும், கொரோனா கால நிவாரணமாக இதுவரை 92,700 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பை வழங்கியுள்ளார் சாமிநாதன்.
எந்த காலத்திலும் நம்ப கூடாது என்று கருணாநிதி சுட்டிக் காட்டிய அரசியல் தலைவர் யார்? ராமதாஸ் விளக்கம்
சென்னிமலை, குண்டடம், காங்கேயம், வெள்ளக்கோவில் என அனைத்து ஒன்றியங்களிலும் வீடு தவறாமல் அரிசி பைகளை விநியோகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன், இதுவரை நிவாரணப் பணிகளுக்காக மட்டும் தனது சொந்த நிதியில் இருந்து ஒன்றே முக்கால் கோடி ரூபாய் செலவழித்துள்ளாராம்.
வெள்ளக்கோவில் சாமிநாதன் களத்திற்கு வரமாட்டார், மக்களை சந்திக்க மாட்டார் என தன்னை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து தனது எதிர்க்கோஷ்டியினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒன்றியம் வாரியாக கிராமம் கிராமமாக நிவாரணப் பொருட்களை இவரே நேரில் சென்று வழங்குவதுடன் பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்று காங்கேயம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தனியரசு, கொரோனா காலத்தில் தங்களை கண்டுகொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகாராக உள்ளது.