அப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்
தந்தை கண் முன்னே லாரி மோதி பெண் டாக்டர் உயிரிழந்தார்
தாராபுரம்: டாக்டர் லாவண்யா தனது அப்பாவை இறுக்கி பிடித்தவாறே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதுதான் அவரது கடைசி இறுக்கம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் இன்னொரு பைக் மோதி கீழே விழ.. அந்த சமயத்தில் வேகமாக வந்த லாரி லாவண்யா மீது ஏறி இறங்கியதில் அங்கேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர், சின்னப்பள்ளம் வயலை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒரு விவசாயி. 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.
இரண்டாவது மகள்தான் லாவண்யா. 23 வயது பெண். விவசாயியாக இருந்தாலும் பெண்ணை பல் டாக்டருக்கு படிக்க வைத்தார். லாவண்யா தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் பஸ்சில்தான் வேலைக்கு போய் வருவார்.
நீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்!
பஸ் ஸ்டாப்
இதற்காக அப்பா பழனிசாமி, லாவண்யாவை பைக்கில் அழைத்து சென்று, தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிடுவார். அதேபோல வேலை முடிந்ததும் இரவு 8.45 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கும் மகளை, பழனிசாமி வீட்டிற்கு கூட்டி செல்வார்.
2 இளைஞர்கள்
இப்படித்தான் இரவு, பஸ்ஸில் வந்து இறங்கிய லாவண்யாவை பழனிசாமி பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு போய்கொண்டிருந்தார். சின்னப்பள்ளம் பிரிவு அருகே இவர்கள் சென்றபோது, பின்னாடி 2 பேர் பைக்கில் வந்தார்கள். அவர்கள் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் 24, கோவிந்தாபுரத்தை சேர்ந்த சரவணன் 21, என்று சொல்லப்படுகிறது.
மதுபோதை
ரெண்டு இளைஞர்களுமே தண்ணி அடித்திருந்தனர். அதனால் போதையில் தாறுமாறாக வண்டியை ஒட்டி வந்த இவர்கள், முன்னால் சென்று கொண்டிருந்த பழனிசாமி-லாவண்யா பைக்கில் பலமாக மோதிவிட்டனர். இதில் பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த லாவண்யா, தூக்கிவீசப்பட்டு, நடுரோட்டில் போய் விழுந்துவிட்டார். பழனிசாமி, மற்றும் பைக்கில் வந்த இளைஞர்கள் ரோட்டோரத்தில் விழுந்தனர்.
தலை நசுங்கியது
நடுரோட்டில் காயங்களுடன் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த லாவண்யா உடல் மீது ஒரு லாரி வேகமாக வந்து ஏறி இறங்கியதுடன், நிற்காமல் சென்றுவிட்டது. இதில் லாவண்யா தலைநசுங்கி அங்கேயே உயிரிழந்தார்.
விசாரணை
தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீசார் காயம் அடைந்த 3 பேரையும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. லாவண்யா மீது ஏறி சென்ற லாரியின் உரிமையாளர் யார், டிரைவர் யார் என்பதெல்லாம் அங்கிருக்கும் சிசிடிவி காமிராவை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.