வங்கிகள் பிடித்த அபராதத்தை திருப்பி தர்றோம்.. காங்கிரஸ் ஜெயிச்சா இது நடக்கும்.. உறுதி தந்த ப.சி
திருப்பூர்:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிகள் விதித்த அபராதம் திருப்பி தரப்படும் என்றும், இது மோடி அரசின் மற்றொரு கொள்ளை என்றும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ராயபுரம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஊழல் அரசு என்று கூறி ஆளுநரிடம் ஊழல் பட்டியலை வழங்கிய பாமக இன்றைக்கு அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அந்த ஊழல் பட்டியலை வைத்து அவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வோம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை , ஜிஎஸ்டி நடைமுறையால் தமிழ்நாட்டில் மட்டும் 50,000 சிறு, குறு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு பூர்த்தி செய்யவில்லை.
ஆண்டு தோறும் 2 கோடி வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி... கொள்கையுள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு தான் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கி கணக்கில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறையை மோடி அரசு கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. அது ஒரு கொள்ளை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பிடித்தம் செய்யப்பட்டு அனைத்து தொகையும் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தரப்படும் என்று பேசினார்.